மறு பிறவி எடுக்கும் கோயபல்சு அச்சிடுக
திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011 17:45
''முந்தையத் தேர்தல்களில் நடத்தப்பட்ட முறைகேடுகளே தேர்தல் ஆணையத்தின் இப்போதைய நடவடிக்கைகளுக்கு காரணமாகும்'' என தமிழக முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரியான நரேஷ் குப்தா கூறியிருக்கிறார்.
நாடெங்கும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் கண் கொத்திப் பாம்பாகக் கண்காணித்து வருகிறது. வாகன பரிசோதனைகள் வேட்பாளர்களின் அலுவலகங்களின் சோதனைகள் என பல வகையிலும் சோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இச் சோதனைகளின் விளைவாக ரூ.25 கோடிக்கும் அதிகமான பணமும் பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு யாரும் உரிமை கோர முன் வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதவி வகிக்கும் உயர் அதிகாரிகள் ஐந்து பேர் வெளி மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு அவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சட்டம் ஒழுங்கு நிலைமைகளையும் அதிகாரிகளின் செயல்பாடுகளையும் ஆராய்ந்து தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளித்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நான்கு பேர் டி.ஜி.பி. உட்பட ஆறு உயர் போலிஸ் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்தது. அது மட்டுமல்ல ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டம் ஒழுங்கு நிலையை கண்காணிக்க வெளி மாநிலங்களைச் சேர்ந்த போலீஸ் ஐ.ஜிக்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
இவ்வளவு கெடுபிடிகளையும் தாண்டி முறைகேடுகளும் நடைபெறுவதாக உயர் நீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்தது. அம் மனுவில் 'நன்றாகத் திட்டமிட்டு வாக்காளர்களுக்கு பணம் தருகின்றனர். போலிஸ் வாகனங்கள் மூலமாகவே பணம் எடுத்துச் செல்லப்படுகிறது. எங்களால் சமாளிக்க முடியாத அளவிற்கு பணப் பட்டுவாடா நடக்கிறது. இதுவரை 2900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணம் விநியோகம் செய்ததாக சில போலீஸ் அதிகாரிகள் மீதே புகார் வந்துள்ளது. இவ்வாறு பணப் பட்டுவாடா செய்தவர்களின் பெயர்களை அறிவித்தால் நீதி மன்றத்திற்கே அதிர்ச்சியாக இருக்கும்' எனக் கூறியது கேட்ட நீதிபதிகள் திடுக்கிட்டார்கள். வாகன சோதனைகளையும் மற்ற நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் தொடர்ந்து மேற்கொள்ளுவதற்குத் தடை விதிக்க முடியாது எனக் கூறிவிட்டனர்.
அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உள்ளூர் போலீஸ் பாதுகாப்பிற்குப் பதில் மத்திய போலீஸ் படையைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப் பட்டனர். ஆனால் மடியில் கனமுள்ள அமைச்சர்கள் இதைக் கண்டு அச்சமடைந்தனர். ஏனெனில் தங்கள் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகளைக் கொண்டுதான் தேர்தல் முறைகேடுகளை அமைச்சர்கள் நடத்தி வந்தனர். அது இயலாமல் போன கோபத்தில் வானத்திற்கும் பூமிக்குமாகக் குதிக்கிறார்கள்.
மத்திய அமைச்சர்களுக்கு 11 போலீசார்களின் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. மத்திய அமைச்சர் அழகிரிக்கு 37 போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. அதிகப்படியான போலீசாரை திரும்பப் பெற்றதைக் கண்டு அவர் கடுங்கோபம் அடைந்திருக்கிறார்.
'எனக்கு ஏதாவது ஏற்பட்டால் தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் அதிகாரி, மதுரை நகர காவல் துறை ஆணையர் ஆகியோர்தான் பொறுப்பு' என எச்சரித்தார்.
அவரது காரை நிறுத்தி சோதனையிட்டதை அராஜகம் என வர்ணித்து குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் தந்திகள் அனுப்பினார்.
மக்களுக்குப் போதுமானப் பாதுகாப்பில்லை. வீடுகள் புகுந்து கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும் சர்வ சாதாரணமாகி விட்டன. இந்த நிலையில் மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களது பாதுகாப்புப் பற்றியே கவலைப் படுவது இவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
மேலூரில் பிரச்சாரம் செய்யச் சென்ற அழகிரியின் நடவடிக்கைகளை வீடியோ படம் எடுத்தவரை அழகிரியின் ஆட்கள் ஓட ஓட விரட்டினார்கள். அவர் தாசில்தாரிடம் அடைக்கலம் புகுந்தார். பின் தொடர்ந்தவர்கள் வீடியோ கேமராவை பறிக்க முயற்சி செய்தனர். ஆனால் தாசில்தார் மறுக்கவே அவரையும் தாக்கி இருக்கிறார்கள். இதன் விளைவாக அழகிரி உட்பட தி.மு.க.வினர் பலர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பொறுப்பில் உள்ளவர் நீதி மன்றத்தில் முன் ஜாமீன் பெறவேண்டிய அவலம் நிகழ்ந்திருக்கிறது.
அழகிரியின் ஆத்திரம் அத்துடன் அடங்கி விடவில்லை. மாறாக மதுரை ஆட்சியர் மீது குற்றம் சாட்டி அறிக்கைகள் வெளியிட்டார். மதுரை கிழக்குத் தொகுதி தேர்தல் அதிகாரியான சுகுமாறன் மதுரை ஆட்சியர் மீது புகார் கூறி தேர்தல் ஆணையத்திற்கு முறையீடு அனுப்பினார். ஆனால் மதுரை ஆட்சியர் குறித்து தலைமைச் செயலாளருக்கு அழகிரி அனுப்பிய புகாரில் சுகுமாறனின் புகார் மனுவும் இணைக்கப்பட்டு அனுப்பப் பட்டது. சுகுமாறனின் புகாருக்கு அழகிரியே பின்னணி என்பது அம்பலமாயிற்று. தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டிய பிரச்சினையில் தலைமைச் செயலாளருக்கு புகார் செய்வது அறியாமையா? அல்லது அதிகாரத் திமிரா?
திருமங்கலம் தேர்தல் தில்லுமுல்லுவின் சூத்திர தாரியான அழகிரி தனது முறைகேடான நடவடிக்கைகளைத் தொடர முடியாத கோபத்தில் அதிகாரிகள் மீது பாய்கிறார்.
அவரைப் பின்தொடர்ந்து தி.மு.க. கூட்டணித் தலைவர்கள் டி.ஜி.பி. போலோ நாத் கூறாத ஒன்றை கூறியதாகத் திரித்துக் கூறி அவர் மீது புகார் செய்திருக்கிறார்கள்.
தனது மகனின் முறைகேடான நடவடிக்கைகளை கண்டிக்க வேண்டிய முதல்வர் கருணாநிதி தேர்தல் ஆணையத்தின் மீது பாய்ந்திருக்கிறார்.
2-4-11 அன்று சேலத்தில் பின்வருமாறு புலம்பியிருக்கிறார். 'தமிழகத்தை தி.மு.க. அரசு ஆள்கிறதா? தேர்தல் ஆணையம் ஆள்கிறதா? நான் தான் முதல்வராக தொடர்கிறேனா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது
தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சர்களின் பாதுகாப்பிற்காக உள்ள போலீசாரை திரும்பப் பெற உங்களுக்கு யார் அனுமதி தந்தது? பிரதமர் உங்களுக்கு இந்த அனுமதியை வழங்கியுள்ளாரா? எங்களைப் பார்த்துப் போலீசார் கம்பை உயர்த்துவதா? ரூ.80 மட்டுமே ஊதியம் பெற்றுவந்த போலீசாருக்கு ஆயிரக் கணக்கில் ஊதியத்தை உயர்த்தியவன் நான்' என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசியிருக்கிறார். ஒரு மாநில முதலமைச்சர் பேசுகிற பேச்சாக அவரின் பேச்சு அமையவில்லை. மாறாக சந்துமுனை சிந்துபாடியின் பேச்சாக அமைந்து சந்தி சிரிக்கிறது.
ஐந்து முறை முதலமைச்சராக இருந்த ஒருவருக்கு தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்ன என்பதே புரியாமல் இருப்பது வெட்கக்கேடானது. அது மட்டுமல்ல தேர்தல் ஆணையத்தையே மிரட்டும் வகையில் பேசுவதும் புழுதியை வாரித் தூற்றுவதும் முதலமைச்சர் பதவிக்குரிய மரியாதையையே கெடுத்துவிட்டது.
உச்ச நீதி மன்றத்தின் வழிகாட்டுதலை மீறி லத்திகா சரணை டி.ஜி.பி. பதவியில் அமர வைத்தவர் இவர். உளவுத் துறையின் பொறுப்பில் எதை வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாரான ஜாபர் சேட்டை நியமித்திருந்தார். முதல்வரின் கண்ணசைவிற்கு ஏற்ப கணைகளாகப் பாய்ந்த இந்த உயர் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றியது அவருக்குக் கொதிப்பை ஏற்படுத்தி விட்டது.
திருமங்கலம் போல வாக்காளர்களுக்குக் கறிச்சோறு போட்டும் கை நிறையப் பணம் கொடுத்தும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற அவரின் கனவில் இடி விழுந்ததைப் போல தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அமைந்தால் மனிதர் குதித்துத் கொதிக்காமல் என்ன செய்வார்?
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தனது எடுபிடிகளைக் கொண்டு உயர் நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வைத்தார். ஆனால் அதுவே அவருக்கு எதிராகத் திரும்பிற்று. தலைமை நீதிபதி தலைமையில் அமைந்த ஆயம் பின்வரும் தீர்ப்பை அளித்தது. ''தேர்தல் ஆணையம் அரசைக் கலந்தாலோசிக்காமல் அதிகாரிகளை இடமாற்றம் செய்தது, தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் வேண்டுகோளை நிராகரித்தது, தனி நபர், வணிகர் போன்றோர் கொண்டு செல்லும் பணத்தைப் பறிமுதல் செய்தது போன்ற பல குற்றச்சாட்டுக்களை முதலமைச்சர் எழுப்பியுள்ளார்.
தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில் பார்த்தால் முதல்வரின் அறிக்கைத் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளை இந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டால், தேர்தல் தேதி, தேர்தல் முடிவுகளை வெளியிடுதல் போன்ற எல்லா விஷயங்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும் எனவே இந்த நீதி மன்றம் தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட முடியாது.'
மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகிக்கும் ஒருவருக்கு உயர் நீதி மன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு சரியான பாடமாகும். இதிலும் அவர் பாடங் கற்கா விட்டால் மக்கள் அவருக்குப் பாடம் புகட்டுவார்கள்.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை அவசர கால நிலைக்கு அவர் ஒப்பிடுவதற்கு முன்னால் தனது கடந்த கால நடவடிக்கைகளை அவர் எண்ணிப் பார்க்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவராக இவர் இருந்த போது தமிழக காவல்துறையின் ஈரல் 60 சதவீதத்திற்கு மேல் அழுகிக் கெட்டு விட்டதாகக் குற்றம் சாட்டினார். ஆனால் இவர் ஆட்சியில் அதைத் திருத்துவதற்கு இவர் எடுத்த நடவடிக்கை என்ன? காவல் துறையைச் சீரமைக்க புதிய போலீசு சட்டம் கொண்டுவர வேண்டுமென உச்ச நீதி மன்றம் அளித்த பரிந்துரையை இதுவரை கருணாநிதி நிறைவேற்றவே இல்லை.
சென்னை உயர் நீதி மன்ற வளாகத்தில் காவல் படை புகுந்து வழக்கறிஞர்களை மட்டுமல்ல நீதிபதிகளையும் மிகக் கடுமையாக தாக்கிய நிகழ்ச்சியை யாரும் மறந்து விடவில்லை. இந்தப் பிரச்சினையில் உச்ச நீதி மன்றம் தலையிட்டு சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட்டும் அதை இறுதிவரை இவர் நிறைவேற்றவில்லை.
அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் மீதெல்லாம் காவல் துறை தடியடி நடத்தியதையும் யாரும் மறக்கவில்லை. உத்தபுரத்தில் மார்க்சிஸ்டு கட்சித் தலைவர்கள் மீது இவரது காவல்துறை தான் தாக்குதல் நடத்தியது.
சீமான், கொளத்தூர் மணி, இராமகிருஷ்ணன் போன்ற பலர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவியவர் இவரே. ஆனால் உயர் நீதி மன்றம் தலையிட்டு அனைவரையும் விடுதலை செய்தது.
இவருடைய ஆட்சியில்தான் எழுத்துரிமை, பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை பறிக்கப்பட்டன. தமிழுணர்வாளர்கள் நடத்திய மாநாடுகளுக்குத் தடை விதித்தார்.
இவர் ஆட்சியில்தான் ஊடகங்கள் தொடர்ந்து மிரட்டப் படுகின்றன. மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டு மூவர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். இந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் தி.மு.க.வினர்தான் என இவரின் பேரன் குற்றம் சாட்டினார்.
அ.தி.மு.க. ஆட்சியில் மோதல் சாவில் வெங்கடேச பண்ணையார் கொல்லப்பட்டப் போது அதைக் கண்டித்து பிரச்சாரம் செய்தவரின் ஆட்சியில் 29 பேர் மோதல் சாவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். காவல் நிலையங்களில் 20க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
கள்ளச் சாராயம், கந்து வட்டி, கட்டைப் பஞ்சாயத்து இந்த மூன்று 'க' தான் தமிழகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இதைச் செய்பவர்கள் முழுவதும் இவரது கட்சிக்காரர்களே.
உண்மையில் இவரது ஐந்தாண்டு கால ஆட்சிதான் அறிவிக்கப்படாத அவசர நிலை ஆட்சியாகும் இவரும் இவருடைய குடும்பமும்தான் சகல அதிகாரங்களையும் தங்களின் கைகளில் எடுத்துக்கொண்டு சட்டத்தையும் சனநாயகத்தையும் சிறிதளவுகூட மதிக்காமல் செயல்பட்டனர்.
இராஜாஜி, காமராஜர் போன்றவர்கள் முதல்வராக இருந்தபோது காவல் துறையை தங்களிடம் ஒரு போதும் வைத்துக் கொண்டதில்லை. ஆனால் கருணாநிதி காவல் துறையை தன்னிடமே வைத்துக் கொண்டிருக்கிறார் எனவே காவல் துறையின் அத்து மீறல்களுக்கு இவரே பொறுப்பாளி ஆவார். அதற்கு முற்றுப் புள்ளி வைக்க தேர்தல் ஆணையம் முனையும் போது மக்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் இவர் பதை பதைக்கிறார்.
1933ஆம் ஆண்டில் ஜெர்மனியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றப் போது இட்லரின் நாஜிக் கட்சிக்கு கம்யூனிஸ்டுகள் தான் கடுமையான எதிரிகளாக இருந்தார்கள். எனவே இட்லரின் சகாவான கோயபல்சு ஒரு சூழ்ச்சித் திட்டத்தைத் தீட்டினார். நாடாளு மன்றக் கட்டிடத்திற்கு நள்ளிரவில் யாரோ தீ வைத்தார்கள். அதை கம்யூனிஸ்டுகள் தான் செய்தர்கள் என்ற கட்டுப்பாடான பிரச்சாரத்தை கோயபல்சு கட்டவிழ்த்து விட்டார். இதன் விளைவாக கம்யூனிஸ்டுக் கட்சி தோற்று நாஜிக் கட்சி வெற்றி பெற்றது.
கோணிப் புளுகன் கோயபல்சு மறு பிறவி எடுத்துக் கருணாநிதியாக தமிழகத்தில் வலம் வருகிறார். ஆனால் தமிழர்கள் இம்முறை ஏமாறப் போவதில்லை.