விதியே! தமிழச் சாதியை என்செய நினைத்தாய்? - - பழ. நெடுமாறன் அச்சிடுக
புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014 14:54

விதியே... விதியே, தமிழச் சாதியை
என்செய நினைத்தா யெனக்குரை யாயோ?

- என மனம் நொந்து பாரதி பாடினார். இலங்கை மலேசியா, பிஜித் தீவு, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இரப்பர், தேயிலைத் தோட்டங்கள் அமைப்பதற்காக தமிழ்நாட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் சொல்லொண்ணாத துன்பங்களுக்கு ஆளாகி நலிவதைக் குறித்து மனம் பொறாமல் இப்பாடலை பாரதி பாடினார்.

இப்பாடலை பாரதி பாடி கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் ஆன பிறகும். பூமிப் பந்தில் வாழ்கிற தமிழர்களின் துயரங்கள் தீரவில்லை. நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.

2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கையில் போர் முடிந்தவுடன் ஐ.நா. மனித உரிமை ஆணையம் சர்வதேச விசாரணையைக் கொண்டுவரவேண்டும் எனக் கூறியது.

அதே ஆண்டு சூன் மாதம் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூனின் சட்ட வல்லுநர் குழு இதே கோரிக்கையை பரிந்துரைத்தது.

2010 ஜனவரியில் டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரியது.

ஜெர்மன் மக்கள் தீர்ப்பாயமும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது.
இலங்கை அரசு உள்நாட்டு விசாரணையைத் தொடங்காத காரணத்தினால் ஐ.நா. விசாரணைக் குழுவை பான்-கீ-மூன் அமைத்தார். ஆனால் இக்குழுவை இலங்கைக்குள் நுழைவதற்கு அனுமதி தர இலங்கை அதிபர் இராசபக்சே மறுத்தார்.

இறுதியாக நல்லிணக்க ஆணைக் குழு என்ற பெயரில் இராசபக்சே தனக்குத்தானே ஒரு குழுவை நியமித்துக் கொண்டார்.

2012ஆம் ஆண்டில் உள்நாட்டு விசாரணை, நல்லிணக்க ஆணையக்குழு பரிந்துரை ஆகியவற்றை செயல்படுத்துவதைக் குறித்த ஒரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்தது. இந்தியாவின் அறிவுரையின்படி இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட தீர்வு காணப்பட வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டது.

இத்தீர்மானத்தின்படி உள்நாட்டு விசாரணையையும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் செயல்படுத்த இராசபக்சே மறுத்தார்.

2013ஆம் ஆண்டில் மீண்டும் சர்வதேச விசாரணையை ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை கோரினார். அதே ஆண்டில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும் அதை ஏற்க இராசபக்சே மறுத்துவிட்டார்.

2014ஆம் ஆண்டில் அமெரிக்கா பிரிட்டன் உள்பட ஐ.நா. பேரவையில் அங்கம் வகிக்கும் 36 நாடுகள் (12 நாடுகள் மனித உரிமை ஆணையத்தில் அங்கம் வகிக்கவில்லை) ஒன்றுகூடி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தன. அத்தீர்மானத்திற்கு ஆதரவாக 23 நாடுகள் வாக்களித்தன. 12 நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா உட்பட 12 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

நீர்த்துப்போக வைக்கப்பட்ட இத்தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள இராசபக்சே மறுத்துவிட்டார் என்பது முக்கியமானது.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் தென்னாசியாவில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

1948ஆம் ஆண்டிலிருந்து தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வந்த இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை சர்வதேச சமுதாயம் தடுத்து நிறுத்த முன்வரவில்லை. கொடிய குற்றங்களில் ஈடுபட்ட சிங்கள அரசுகள் தண்டனைகளிலிருந்து தப்பியதோடு, தங்குதடையின்றித் தொடர்ந்தார்கள். தமிழர்களுக்கு எதிரான தங்களது கொடூரமான செயல்களை கடந்த 66 ஆண்டுகாலமாக சிங்கள அரசுகள் மேற்கொண்டு வந்த இந்த இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு இத்தீர்மானம் முதல் தடவையாக முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்கிறது.

வரைவுத் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தபடி வடகிழக்கில் இருந்து இராணுவம் வெளியேறவேண்டும் என்ற பகுதி இந்தியாவின் அழுத்தம் காரணமாக நீக்கப்பட்டுவிட்டது. இதன் மூலம் சர்வதேச விசாரணை என்பது பல சிக்கல்களை சந்திக்க நேரும். வீதி தோறும் இராணுவம் முகாமிட்டிருக்கும் போது அதற்கு எதிராக சாட்சியம் அளிக்க யாரும் முன்வரமாட்டார்கள். இதன் விளைவாக இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவதற்குப் பதில் அப்பிரச்சினையை மேலும் அதிகமாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

தனது பிராந்திய நலன்களுக்கு உட்பட்ட நாடான இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தடுத்து நிறுத்தாததோடு சிங்கள அரசின் செயல்களுக்கு துணை போன இந்திய அரசை இனியும் நம்புவதால் எந்தப் பயனும் இல்லை என தமிழர்கள் முடிவுக்கு வந்தனர். தமிழர் வரலாற்றில் மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் அவர்களுக்குத் துணை நிற்க வேண்டிய இந்தியா நேர் மாறாகச் செயல்பட்டதின் காரணமாக வேறு நாடுகளின் ஆதரவைத் தேடி தமிழர்கள் செல்ல வேண்டிய நிலை உருவானது.

தமிழர்களின் எதிர்காலத்திற்கும் தென்னாசியாவின் எதிர்கால அரசியலுக்கும் உத்திரவாதம் தரும் நாடுகளாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மேற்கு நாடுகள் முன் வந்ததற்கு இந்தியா செய்த தவறே காரணமாகும்.

தென் ஆசியாவில் உள்ள பர்மா, திபெத், இலங்கை போன்ற நாடுகளில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் காவலாக இருக்க வேண்டிய இந்தியா தனது வரலாற்றுக் கடமைகள், பூகோள ரீதியான முதன்மை, உள்ளார்ந்த அரசியல் எல்லாவற்றிற்கும் மேலாக மனசாட்சி ஆகியவற்றைப் புறக்கணித்துத் தூக்கி எறிந்த இந்திய அரசு இவ்வாறே தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறது.

சீனா, பாகிஸ்தான், கியூபா போன்ற நாடுகளின் எதிர்ப்புக்கிடையே அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகள் ஆகியவற்றின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தின் விளைவாக இந்தியா முற்றிலுமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தீர்மானம் முன்மொழியப்பட்ட நிலையிலேயே அதைத் தடுத்து நிறுத்த பாகிஸ்தான் கடும் முயற்சி செய்தது. இலங்கையில் சனநாயகமும், சனநாயக அமைப்புகளும் இத்தீர்மானத்தின் மூலம் புறக்கணிக்கப்படுவதாக பாகிஸ்தான் கூறியது. அது மட்டும் அல்ல. இத் தீர்மானத்தின்படி நடவடிக்கைகள் எடுப்பதற்கு தேவையான நிதி வசதி மனித உரிமை ஆணையத்திடம் இல்லை என பாகிஸ்தான் வாதாடியது. ஆனால் அவை எடுபடவில்லை. உடனடியாக சீனா தலையிட்டு இத்தீர்மானம் குறித்து விவாதிப்பதை ஒத்திவைக்கும்படி கோரியது. இவ்விருநாடுகளும் இலங்கை அரசுடன் எப்போதும் ஒத்துழைக்கிற நாடுகள். ஆனால், இந்நாடுகளுடன் கியூபா சேர்ந்துகொண்டது வியப்பளித்தது. அமெரிக்காவுக்கு எப்போதும் எதிர்ப்புத் தெரிவித்துவரும் கியூபா இத்தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்த காரணத்தினால் எதிர்த்து வாக்களித்தது. இறுதியாக சர்வதேசப் புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என இத்தீர்மானத்தில் கூறப்பட்டிருந்ததை தடுத்து நிறுத்த சீனா, பாகிஸ்தான், கியூபா ஆகிய நாடுகள் இணைந்து பெருமுயற்சி செய்தன.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த நார்வே செய்த முயற்சிகளை தகர்த்த இந்தியா இப்போதும் சர்வதேச புலன் விசாரணையைத் தடுத்து நிறுத்த எல்லா வகையிலும் முயன்றதின் மூலம் இலங்கையுடன்தான் இந்தியா இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் "இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற இராணுவத்தின் அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான நடுநிலையான விசாரணை நடைபெற ஒரு குழுவை நியமிக்க அனைத்து நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசை இந்தியா வலியுறுத்தும்'' என கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளிவந்தவுடனேயே சிங்கள அரசு எச்சரிக்கையாகி இந்தியாவை மிரட்டிப் பணியவைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

கடந்த இருமுறை அமெரிக்கத் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்தது. எனவே இம்முறை அவ்வாறு செய்வதிலிருந்து இந்தியாவைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சில இரகசியங்களை சிங்கள அரசு அம்பலப்படுத்தியது. தன்னுடன் இந்தியா சிறந்த முறையில் இராணுவ ஒத்துழைப்பை வைத்துள்ளதாக உலகத்திற்கு உணர்த்தும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் இலங்கைக்கு அரசுமுறைப் பயணமாக சென்ற இந்திய இராணுவ தென்பிராந்தியத் தளபதி அசோக் சிங், இந்தியக் கடற்படை தலைமைத் தளபதி டி.கே.தோஷி ஆகியோர் இலங்கை அதிபர் இராசபக்சேயுடன் நடத்திய சந்திப்பு சம்பந்தமான புகைப்படங்களையும் இன்னும் அதிகமான சிங்கள இராணுவ அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் பயிற்சி அளிக்க இந்தியா அளித்த வாக்குறுதியையும் இலங்கை அரசு தன்னுடைய வலைத் தளங்களில் வெளியிட்டு அம்பலப்படுத்தியது. அது மட்டுமல்ல தமிழர்கள் வாழும் வடக்கு-கிழக்கு மாநிலங்களில் காணாமல் போனவர்கள் குறித்து நடத்தும் விசாரணையை இந்திய அமைதிப்படை இருந்த காலத்திலிருந்தே அதாவது 1987 முதல் 2009 வரையிலான காலம் வரை விசாரணை நடத்த வேண்டும் என இராசபக்சே ஆணை பிறப்பித்தார்.

இலங்கையில் சிங்கள இராணுவம் தமிழர்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதையும் 1,40,0000 அப்பாவி மக்களைப் படுகொலை செய்ததையும், 1,46,000த்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு கொண்டுபோகப்பட்டவர்கள் கதி இதுவரை தெரியாத நிலையும் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டு இன்னமும் புகலிடம் இல்லாமல் தவிக்கும் நிலையும் தமிழர்களுக்கு எதிரான அப்பட்டமான மனித உரிமை மீறல்களையும் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக இராணுவம் தொடர்ந்து கடைப்பிடித்துவரும் பாலியல் வன்முறைகளையும், தமிழர்களின் நிலங்களைப் பறித்து சிங்களர்களைக் குடியேற்றுவதும் இன்னமும் தொடர்கின்றன. இந்தச் சூழ்நிலையில் சிங்கள அரசுக்கு எதிரான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை தடுத்து நிறுத்த இந்தியா செய்த முயற்சி உலகத்தில் இந்தியாவின் மதிப்பை எந்த அளவுக்குக் குறைத்துள்ளது என்பதை எண்ணிப் பார்க்க டில்லி மறந்துவிட்டது.

இந்திய வெளியுறவுத் துறையில் உள்ள ஒரு சிறு கும்பலே இதற்குக் காரணம் என்பது அம்பலமாகியிருக்கிறது. இந்தியாவின் நிதியமைச்சராக இருக்கக்கூடிய ப. சிதம்பரம் அவர்கள் அண்மையில் அளித்த நேர்காணலில் "ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. தீர்மானத்தை ஆதரிக்க வேண்டாம் என்ற முடிவு மத்திய அமைச்சரவையின் முடிவு அல்ல. அது வெளியுறவுத்துறையின் முடிவு'' என்று கூறியிருக்கிறார்.

வெளியுறவுத்துறையின் செயலாளரான சுஜாதாசிங் "இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் அமெரிக்கத் தீர்மானம் அமைந்திருந்ததால் இந்தியா ஆதரிக்கவில்லை'' என்று கூறியிருக்கிறார். அப்படியானால் பாகிஸ்தானின் இறைமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் ஊறுவிளைவிக்கும் வகையில் இந்திய இராணுவத்தை அனுப்பி வங்க தேச விடுதலைக்கு இந்தியா உதவியதும் தவறாகிவிடும். நேரு இந்திரா ஆட்சிக் காலங்களில் இந்திய அரசு என்ன செய்தது என்பதையே சற்றும் தெரிந்து கொள்ளாதவர்கள் முக்கியப் பொறுப்புகளில் இருப்பது காலம் செய்த கோலம்தான்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற தீர்மானம் முதலமைச்சரால் முன்மொழியப்பட்டு அனைத்துக்கட்சிகளாலும் ஆதரிக்கப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானத்திற்கு எதிராக இந்திய அரசு செயல்பட்டிருப்பதன் மூலம் இந்தியாவின் கூட்டாட்சி முறை பெரும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. தமிழக சட்டமன்றத் தீர்மானத்திற்குப் புறம்பாக இந்திய அரசு நடந்துகொண்ட முறை ஏற்கெனவே புண்ணாகிப்போன தமிழர்களின் நெஞ்சங்களில் வேலைச் செருகுவது போன்றதாகும். இந்தியாவில் வாழும் ஏழரைக் கோடி தமிழ் மக்களின் ஒருமித்தக் கோரிக்கையைவிட ஒன்றேகால் கோடி சிங்களரை சர்வதேச விசாரணையில் இருந்து காப்பதே முக்கியமானது என இந்திய அரசு உறுதிகொண்டிருப்பது அம்பலமாகியிருக்கிறது.

போர்க் குற்றவாளிகள், சர்வதேச மனித உரிமைகளையும் சட்டங்களையும் அப்பட்டமாக மீறுகிற மனித சமுதாயத்தின் பகைவர்கள், தங்களின் பாலியல் வெறிக்கு ஒட்டுமொத்தத் தமிழ்ப் பெண்களை இரையாக்கி வருபவர்கள் ஆகியோரைப் பாதுகாப்பதுதான் தனது தேசிய நலன்களுக்கு உகந்தது என இந்தியா நினைக்குமானால், அது தேசத்தந்தையான காந்தியடிகளுக்கு இழைக்கப்படுகின்ற துரோகமாகும்.

இந்தியாவின் போரைத்தான் தாங்கள் நடத்தினோம் என மகிந்த இராசபக்சேயும் அவருடைய சகோதரர்களும் திரும்பத் திரும்ப கூறிவருவதை மத்திய அரசோ அல்லது வெளியுறவுத்துறையோ ஒரு போதும் மறுக்கவில்லை. தமிழர் நெஞ்சங்களில் இவையெல்லாம் புகைந்துகொண்டிருக்கிறது. வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலில் இதற்குரிய தண்டனையை காங்கிரஸ் கட்சிக்கு தமிழர்கள் அளிப்பார்கள்.

- நன்றி : தினமணி 7-4-2014