ஏழு தமிழர்களையும் பரோலில் விடுவிக்க பழ.நெடுமாறன் வேண்டுகோள் அச்சிடுக
புதன்கிழமை, 20 ஏப்ரல் 2016 16:04

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

இராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்ற ஏழுபேர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய முடியாது என மத்திய அரசு தமிழக அரசுக்குத் தெரிவித்து இருக்கிறது.

கடந்த 24 ஆண்டு காலமாக 7 பேரும் சிறையில் சொல்லொண்ணாத மனத் துன்பத்திற்கு ஆளாகி வாடுகிறார்கள். மனிதநேய அடிப்படையில் இவர்களை விடுதலை செய்வது என 2014ஆம் ஆண்டு தமிழக அரசு செய்த முடிவுக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. அந்த வழக்கு இன்னமும் எடுக்கப்படாமல் இழுபறியாக நீடிக்கிறது.

ராஜீவ் கொலையில் புலன் விசாரணை சரியாக நடக்கவில்லை என ஜெயின் ஆணையம் குற்றம் சாட்டியதின் விளைவாக பல்நோக்கு புலனாய்வுக்குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. கடந்த 19 ஆண்டு காலமாகியும்கூட இந்த குழு தனது அறிக்கையை இன்னும் கொடுக்கவில்லை. எப்போது கொடுக்கும் என்பதும் யாருக்கும் தெரியாது. இந்தக் குழுவின் அறிக்கை வெளிவந்தால்தான் உண்மையான குற்றவாளிகள் யார் என்பது தெரியவரும். ஆனால், வேண்டுமென்றே இக்குழுவின் விசாரணை நீடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதன் விளைவாக இந்த ஏழு பேரும் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்.

புலனாய்வுக் குழுவின் அறிக்கையோ, அல்லது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்போ வெளிவரும்வரை தமிழக அரசு காத்திருக்க வேண்டியதில்லை. தமிழக முதல்வருக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த ஏழு பேருக்கும் (பரோல்) சிறை விடுமுறை அளிக்கலாம். இதற்கு முன்னுதாரணமும் இருக்கிறது.

மதுரையில் மாநகராட்சி உறுப்பினராக இருந்த லீலாவதி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்ற ஒருவருக்கு அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி அவர்கள் ஒரு மாத சிறை விடுமுறை கொடுத்து, அது முடிந்து சிறைக்குத் திரும்பியதும் மறுநாளே ஒரு மாத சிறை விடுமுறை கொடுக்கப்பட்டது. இவ்வாறு 7 ஆண்டு காலம் அவருக்கு சிறை விடுமுறை நீடிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. பிறகு 7 ஆண்டு காலம் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் அனைவரையும் விடுதலை செய்தபோது இவரும் விடுதலைசெய்யப்பட்டார். இந்த முன்மாதிரியைப் பின்பற்றி தமிழக முதல்வர் உடனடியாக இந்த ஏழு பேருக்கும் சிறை விடுமுறை கொடுக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.