தேசியம் - மொழி மரபைச் சார்ந்தது-(பழனி மகிழ்நன்) அச்சிடுக
சனிக்கிழமை, 16 மார்ச் 2019 13:58

தேசியம் என்பது மொழிமரபு சார்ந்தது. மதவழிப்பட்டது ஆகாது. "வடவேங்கடம்-தென்குமரி ஆயிடை-தமிழ்கூறும் நல்லுலகு"- என்பது தமிழ்த் தேசியம். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பது தமிழரின் மானிட நேய உணர்வாகும்.

இந்தியா பல்வேறு மொழிமரபு இனவழித் தேசியங்களைக் கொண்ட ஒரு கூட்டு நாடு. இந்திய இறையாண்மை கூட்டு இறையாண்மையே தமிழர் தங்களின் நாடு- மொழி- இனம்- கலை- இலக்கியம்-பண்பாடு-நாகரிகம் ஆகிய மரபுவழி உரிமைகளின் -அடையாளத்தைப் பாதுகாப்பதற்குத்  தமிழ்த்தேசியம் அவசியமாகிறது. தமிழ்த்தேசியம் இயல்பானது, இயற்கையானது. தமிழ்த்  தேசியத்தை வலிந்து  குறைகூறுகிறவர்கள்  இந்தியாவில் உள்ள மற்ற தேசியத்தை குறைகூற முடியுமா? கூறினால் அந்தமொழிவழித் தேசிய இனத்தார் ஏற்பார்களா?
தனித்தனிக் குடும்பங்கள் சேர்ந்துதான் சமுதாயம் ஆகிறது. பல்வேறு சமூகங்கள் சேர்ந்தே ஊர் ஆகிறது. பல்வேறு ஊர்கள் சேர்ந்துதான் நாடாகிறது. பல்வேறு நாடுகள் சேர்ந்துதான் உலகமாகிறது. இதில் குடும்பம் என்பதும், சமூகம் என்பதும், ஊர் என்பதும் அனைத்திற்கும் அடிப்படையாகிறது. இவைகளைத் தவறு எனக் கூறமுடியுமா? இவைகளை மறக்க முடியுமா? மூலத்தை மறக்கச் சொல்வதும், முகத்தை இழக்கச் சொல்வதும் சரியாகுமா?