மேக தாது திட்டம் காவிரிப் பாசனப் பகுதிகள் பாலைவனமாவதைத் தடுக்க தமிழக அரசும், கட்சிகளும், விவசாய அமைப்புகளும் ஒன்றிணைந்து போராடுவோம் -பழ. நெடுமாறன் அச்சிடுக
புதன்கிழமை, 02 பெப்ரவரி 2022 14:31

“1962ஆம் ஆண்டு மேக தாது அணை கட்டுவதற்கு மின்சார உற்பத்தி செய்வதே நோக்கம்” என கருநாடக அரசு அறிவித்தது. ஆனால், அன்றைய தமிழக அரசின் கடும் எதிர்ப்பின் காரணமாக ஒன்றிய அரசு அத்திட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால், இப்போது மேக தாது அணை கட்டுவதின் நோக்கம் “பெங்களூர் நகர் மக்களுக்குக் குடிநீர் வழங்குதல் ஆகும்” என கருநாடக அரசு கூறுகிறது. மக்களுக்குக் குடிநீர் என்று சொன்னால், ஒன்றிய அரசோ, உச்சநீதிமன்றமோ அதைத் தடுக்காது என்ற சூழ்ச்சித் திட்டத்துடன் கருநாடகம் இவ்வாறு கூறுகிறது.  

ஆனால், பெங்களூர் நகருக்கு வேறு இடங்களிலிருந்து தேவையான குடிநீரைக் கொண்டு வருவதற்கான கட்டமைப்பு வசதிகள் கருநாடகத்திடம் உண்டு. பெங்களூர் நகருக்குத் தேவை 4.75டி.எம்.சி. நீர் மட்டுமே. இந்த நீரை எடுப்பதற்காக 67.17டி.எம்.சி. நீரைத் தேக்கும் வகையில் மேக தாது அணையைக்கட்டுவதற்குக் கருநாடகம் திட்டமிடுவது ஏன்? மேலும், மேக தாது அணையிலிருந்து வெகு தொலைவில் உள்ள பெங்களூருக்குப் பெரும் பொருட்செலவில் தண்ணீர் கொண்டுபோவது ஏன்? என்ற கேள்விகளுக்குக் கருநாடகம் பதில் கூறவேண்டும்.

“காவிரியில் ஆண்டுதோறும் 200 டி.எம்.சி. நீருக்குமேல் வீணாகக் கடலில் கலக்கிறது. அதைத் தடுக்கும் வகையில் தமிழகம் எதுவும் செய்யவில்லை. எனவே, அந்த நீர் வீணாவதைத் தடுக்கவே மேக தாது அணைத் திட்டம் கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளோம்” என கருநாடகம் உச்சநீதிமன்றத்தில் வாதாடியது. அதன் விளைவாக உச்ச நீதிமன்றம் தமிழகத்தின் நலன்களுக்கு முற்றிலும் எதிரான பின் கண்ட தீர்ப்பை வழங்கியது.

"பொது மேற்பார்வைக் குழுவின் கட்டுப்பாட்டிலும், தமிழகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும் கருநாடக அரசு புதிய அணை கட்டிக்கொள்ளலாம், அணைப் பராமரிப்பு, நீர் திறப்பு உள்ளிட்டவற்றை பொது மேற்பார்வைக் குழுவே செய்ய வேண்டும்'' என உச்சநீதிமன்றம் 17-8-2017 அன்று தீர்ப்பளித்தது.

இக்கருத்தைத் தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு காவிரிப் பிரச்சினையின் கடந்த கால வரலாற்றினை தமிழகம் சார்பில் வாதாடியவர்கள் சரிவர எடுத்துச்சொல்லவில்லை என்பது இதன்மூலம் தெரிகிறது.

கருநாடகத்தில் உள்ள கிருஷ்ணசாகர் அணை, கபினி நீர் அணை ஆகியவை நிரம்பி வழியும் நீர் முழுமையாக மேட்டூர் அணைக்கு வந்து சேருகிறது. இந்த மிகை நீரைப் பயன்படுத்தி காவிரி – வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தைத் தமிழகம் செயல்படுத்தி வருகிறது. அதைபோல, மேட்டூர் அணையிலிருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் உள்ள ஏரிகளை நிரப்பும் சரபங்கா திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களையெல்லாம் சீர்குலைக்க வேண்டும், தமிழகத்திற்கு மிகை நீர் செல்லவிடாமல் தடுக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மேக தாது அணை கட்டும் திட்டத்தைச் செயல்படுத்த கருநாடகம் முனைகிறது.

1961ஆம் ஆண்டில் தமிழக எல்லைக்குள் ஒகேனக்கல் அருகே தமிழகம் கட்டவிருந்த அணைகளை கடுமையாக எதிர்த்து அவற்றுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்க மறுத்ததையும் அந்த அணைகளை தமிழகம் கட்டாமல் நிறுத்தி வைத்ததையும் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கோ, ஒன்றிய அரசின் கவனத்திற்கோ, காவிரி மேலாண்மைக் குழுவின் கவனத்திற்கோ கொண்டு போகாமல் தமிழக அரசு தொடர்ந்து தவறிவிட்டது.

மீண்டும் மேக தாது திட்டம்

தமிழ்நாட்டின் எல்லைக்கு மிக அருகில் உள்ள இடத்தில் அதாவது ஒகேனக்கல்லில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் மேகதாது என்னும் இடத்தில் புனல் மின் உற்பத்தி நிலையம் ஒன்றினை அமைக்கப் போவதாக 1982ஆம் ஆண்டு சனவரி முதல் தேதியன்று கருநாடக முதலமைச்சராக இருந்த குண்டுராவ் மீண்டும் அத்திட்டத்தை கருநாடக சட்டமன்றத்தில் அறிவித்து அம்மாநில மக்களுக்கு புத்தாண்டுப் பரிசாக இதை அளிப்பதாகவும் கூறினார்.

உடனடியாக தமிழக சட்டமன்றத்தில் 6-2-1982 அன்று ஆளுநர் உரையின்மீது நடைபெற்ற விவாதத்தில் நான் பேசும்போது "1961ஆம் ஆண்டிலிருந்து தமிழகம் திட்டமிட்டுள்ள ஒகேனக்கல் புனல் மின் திட்டம் இதனால் பாதிக்கப்படும். மேகதாது திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்தின் ஒகேனக்கல் திட்டத்திற்கு தண்ணீர் வராது. அத்திட்டத்தை கைவிடவேண்டிய நிலை ஏற்படும். அத்துடன் மேட்டூருக்கு வரும் தண்ணீர் அடியோடு தடுக்கப்படும். தமிழகம் மின்சாரப் பற்றாக்குறை மாநிலமாகும். ஆனால் கருநாடகம் மின்சாரத்தில் தன்னிறைவு பெற்ற மாநிலமாகும். தமிழ்நாட்டிற்கு காவிரி ஒன்றே பெரிய ஆறு ஆகும். தமிழ்நாட்டின் நிலப்பகுதியில் 34% பகுதி காவிரிப் படுகையிலேயே அமைந்துள்ளது. கருநாடகத்தில் காவிரிப் படுகையின் பரப்பளவு அதன் நிலப்பகுதியில் 17% மட்டுமே. தமிழ்நாட்டு ஆற்றுப்பாசன நிலத்தில் 60% காவிரி ஆற்றின் நீரையே நம்பியுள்ளது. ஆனால், கருநாடகத்தில் காவிரி மட்டுமின்றி, கிருஷ்ணா ஆறு, கோதாவரி ஆற்றின் கிளை ஆறுகள், துங்கபத்திரா கிளை ஆறு மற்றும் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் பலவும் உள்ளன. மேற்கண்ட ஆறுகளில் இருந்து கருநாடகம் 6500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இருப்பினும் 1400 மெகாவாட் மின்சாரம்தான் இதுவரை அம்மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 4100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வழி வகை இருந்தும்கூட பற்றாக்குறை மாநிலமான தமிழகத்திற்குக் கேடுவிளைவிக்கும் வகையில் மேகதாது அணையைக் கட்டுவதற்கு முயற்சி செய்கிறது. தமிழக எல்லையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இந்த அணை கட்டப்படுமானால் ஒகேனக்கல் அணையை நாம் கட்ட முடியாது. நமது திட்டத்தை கைவிட நேரிடும்'' எனக்கூறினேன்.

எதிர்க்கட்சி வரிசையில் இருந்த பலரும் ஆதரவு தெரிவித்தனர். மேகதாது திட்டத்திற்கு தமிழக அரசின் எதிர்ப்பை இந்திய அரசுக்குத் தெரிவிப்பதாக அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் உறுதியளித்தார். அதன்படியே எதிர்ப்பைத் தெரிவித்தார். முதல்வராக ஜெயலலிதா இருந்த போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடுத்தார். இதன் விளைவாக மேகதாது திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கவில்லை.

மேக தாது திட்டத்தைக் குறித்து கருநாடகம் சிந்தித்துப் பார்க்காத காலத்தில் 1961-ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒகேனக்கல்லுக்குக் கீழே நமது எல்லைக்குள் இரண்டு அணைகளைக் கட்டுவதற்கு திட்டமிட்டது. இதன்படி காவிரியின் மிகை நீர் வீணாகாமல் தடுக்கப்படும். மேலும் தமிழகத் திட்டத்தின்படி காவிரியில் இரண்டு அணைகள் கட்டப்படும். முதலாவதாக இராசிமணல் அணை கட்டப்படும். இங்கு அமைக்கப்படும் புனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் 360 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த அணைக்குக் கீழே 5 கி.மீ. தொலைவில் ஒகேனக்கல் அணை கட்டப்பட்டு அங்கு 120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த இரண்டு அணைகளின் மூலம் 480 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கும்.

இதையொட்டி மேட்டூர் அணையின் உயரம் மேலும் 10 அடி அதிகரிக்கப்படும். ஒகேனக்கல் மின் உற்பத்தித் திட்டத்தின் கீழ் கட்டப்படும் இரண்டு அணைகளின் விளைவாக இப்பகுதியில் பாசன வசதிகள் எதுவும் செய்யப்படாது. மின்சார உற்பத்திக்காக மட்டுமே இந்த அணைகள் கட்டப்படும். இந்த அணைகளிலிருந்து வெளியேறும் நீர் மேட்டூர் அணையில் வந்து நிறையும்.

இந்த இரண்டு அணைகள் கட்டப்படுவதின் மூலம் காவிரிப் பாசனப் பகுதியில் வெள்ளச் சேத அபாயம் நிரந்தரமாக தடுக்கப்படும். தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறை இதன் மூலம் தீர்க்கப்படும். இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் என்பது இந்தியாவின் மற்ற மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து கிடைக்கக்கூடிய வருமானத்தைவிட அதிகமானதாகும். இப்பகுதி வன விலங்கு சரணாலயமாகவும், சுற்றுலா இடமாகவும் மாறி அந்நிய செலாவணி பெருகுவதற்கு வழி ஏற்படும். உள்நாட்டு மீன் உற்பத்தியும் பெருகும். வெள்ளம் பெருகி ஓடி   வீணாகக் கடலில் கலப்பதைத் தடுத்து நிறுத்தி நீரை சேமிக்க முடியும். இப்படிப் பலவகையிலும் ஒகேனக்கல் சிறந்தத் திட்டமாகும்.

தமிழகத்தின் இடைவிடாத முயற்சியின் காரணமாக மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் ஒகேனக்கல் புனல் மின் திட்டத்தை நிறைவேற்றலாம் என தேசிய புனல் மின்னுற்பத்தி ஆணையம் பரிந்துரை செய்தது. ஆனால், இத்திட்டத்திற்கு கருநாடக மாநிலத்தின் ஒப்புதலைப் பெற்றால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்தது.

ஆனால், கடந்த 61 ஆண்டு காலத்திற்கு மேலாக இத்திட்டங்களுக்கு கருநாடகம் ஒப்புதல் அளிக்காத காரணத்தினால் ஒன்றிய அரசு அனுமதி அளிக்க மறுத்து வருகிறது.

ஒகேனக்கல் திட்டத்தை தமிழகம் தயாரித்து ஒன்றிய அரசிடமும், தேசிய புனல் மின் உற்பத்தி ஆணையம் ஆகியவற்றின் ஒப்புதலுக்காக 25-8-1961இல் அனுப்பிய காலக்கட்டத்தில் கருநாடக அரசு மேகதாது திட்டம் குறித்துச் சிந்திக்கவும் இல்லை. எதிர்ப்புத் தெரிவிக்கவும் இல்லை. ஆனால், 1982ஆம் ஆண்டில் அதாவது 21 ஆண்டுகள் கழித்து மேகதாது திட்டத்தை கருநாடகம் அறிவித்தது. ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றவிடக்கூடாது என்ற உள்நோக்கத்துடனும், கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிறைந்து வழிந்தோடி வரும் நீர். இடையில் எவ்வித தடையும் இல்லாமல் நேரடியாக மேட்டூர் அணைக்கு வந்து சேருவதைத் தடுக்கும் நோக்கத்துடன்தான் மேகதாது அணையை கட்டுவதில் முனைந்து நிற்கிறது. மின்உற்பத்தி மட்டுமே அதன் நோக்கம் என்று சொன்னால் கருநாடகத்தில் ஓடும் கிருஷ்ணா மற்றும் ஆறுகளில் 4,100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வழி உண்டு. அதைச் செய்யாமல் மேகதாது திட்டத்தை கருநாடகம் முன்னிறுத்தி ஒகேனக்கல் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் 61 ஆண்டு காலமாக முட்டுக்கட்டைப் போட்டு வருகிறது என்ற உண்மையை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல தமிழக அரசு தவறிவிட்டது.

1996ஆம் ஆண்டிலிருந்து தமிழகமும் கருநாடகமும் புனல் மின் நிலையங்கள் அமைப்பது குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தின. தமிழகத்தில் இராசிமணல் புனல் மின் திட்டம், ஒகேனக்கல் புனல் மின் திட்டம், கருநாடகத்தில் சிவசமுத்திரம் திட்டம், மேகதாது திட்டம் ஆகிய நான்கு திட்டங்கள் குறித்து நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் வெற்றிபெறவில்லை.

2009ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு அதிகாரிகளுக்கு முன்னிலையில் இரு மாநில அதிகாரிகளும் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. ஒகேனக்கல் இராசிமணல் திட்டங்களை ஒன்றிய அரசே நிறைவேற்றி இரு மாநிலங்களும் மின்சாரத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் என தமிழகம் கூறிய யோசனையையும் கருநாடகம் ஏற்கவில்லை. மின் உற்பத்திக்காகத் தான் மேகதாது அணையைக் கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக கருநாடகம் கூறுவது உச்ச நீதிமன்றத்தையும் ஒன்றிய அரசையும் ஏமாற்றும் நோக்கம் கொண்டதாகும். தமிழகம் தனது எல்லைக்குள் தனது செலவில் இரண்டு அணைகள் கட்டி உற்பத்தியாகும் மின்சாரத்தில் கருநாடகத்திற்கும் பங்கு தருவதாக கூறிய திட்டத்தை கருநாடகம் ஏற்க மறுத்தது ஏன்? இந்த முக்கியமான விவரத்தை உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கும் ஒன்றிய அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்ல தமிழக அரசு தவறிவிட்டது. வெள்ளக் காலங்களில் பெருகி தமிழகத்திற்கு வரும் மிகை நீரைத் தடுக்கும் ஒரே நோக்கத்துடன்தான் மேகதாது திட்டத்தைக் கருநாடகம் செயற்படுத்தத் துடிக்கிறது என்ற உண்மையைத் தோலுரித்துக் காட்ட நாம் அடியோடு தவறிவிட்டோம்.

பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால்
மெய் போலும்மே மெய் போலும்மே!
மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையால்
பொய் போலும்மே பொய் போலும்மே!

என வெற்றி வேற்கை பாடலில் அதிவீரராம பாண்டியர் சொல்லியிருப்பது நடந்தேறிவிட்டது. நமது பக்கம் உண்மை இருந்தும் நாம் சொல்லாததால் கருநாடகத்தின் பொய்ம்மை உச்ச நீதிமன்றம் வரை அரங்கேறிவிட்டது.

2007ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் மேற்கண்ட நான்கு புனல் மின் உற்பத்தித் திட்டங்கள் குறித்து கூறுகையில் "புனல் மின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும் அதன் மூலம் அணைகளில் தேக்கப்படும் காவிரி நீரை வேளாண்மைப் பயன்பாட்டிற்காக திறந்துவிடுவது குறித்து நாங்கள் ஏற்கெனவே இட்டுள்ள ஆணைகள் எக்காரணம் கொண்டும் மீறப்படலாகாது'' என்று திட்டவட்டமாக கூறியது. அதாவது தமிழகத்திற்கு அளிக்கப்படவேண்டிய நீர் குறித்தக் காலங்களில் குறித்தபடி அளிக்கப்பட வேண்டும் என்பதே இதற்குப் பொருளாகும்.

ஆனால், புனல் மின் திட்டங்களுக்கு நடுவர் மன்றம் அனுமதி அளித்துவிட்டதாக கருநாடகம் வேண்டுமென்றே தவறாகப் பொருள் கூறி மேகதாது திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முற்படுகிறது. மேலும் காவிரிப் பிரச்சினை உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் இன்னும் உள்ளது. தனது முடிவினை உச்சநீதிமன்றம் அறிவிக்காத வகையில் மேகதாது அணைத்திட்டம் உள்பட எத்தகையத் திட்டத்தையும் மேற்கொள்ளுவதற்கு கருநாடகத்திற்கு உரிமை கிடையாது.

மேலும் மேக தாது திட்டத்திற்கு ஒன்றிய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் இசைவு பெறாமலும் அனுமதி பெறாமலும் இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என கருநாடக அரசு திரும்பத் திரும்பக் கூறி வருகிறது. ஆனால் தென் மண்டலப் பசுமைத் தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வு கருநாடக அரசின் அறிவிப்பை தானாகவே விசாரணைக்கு எடுத்துக் கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தைச் சார்ந்த மூத்த அதிகாரிகள் கொண்ட ஆய்வுக் குழு ஒன்றினை அமைத்து இத்திட்டம் குறித்து முழுமையாக ஆராய்ந்து அறிக்கைத் தாக்கல் செய்யும்படி ஆணைப் பிறப்பித்தது. ஆனால் கருநாடக அரசு தில்லியில் உள்ள அகில இந்திய பசுமைத் தீர்ப்பாயத்தில் முறையிட்டு இந்த ஆணைக்கு தடை பெற்றது. தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை இரத்து செய்யும் அதிகாரம் எதுவும் அகில இந்திய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு கிடையாது என சென்னை உயர் நீதிமன்றம் மற்றொரு வழக்கில் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பைப் பயன்படுத்தி சென்னை உயர் நீதிமன்றத்திலேயே தில்லி பசுமைத் தீர்ப்பாயத்தின் தடைக்கு எதிராக ஆணை வாங்குவதற்குப் பதில் தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அந்த வழக்கு இன்னமும் கிடப்பில் கிடக்கிறது. எனவே உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை உடனடியாக எடுத்துக் கொள்வதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும்.

1961ஆம் ஆண்டிலிருந்து தமிழகம் கட்டுவதற்கு திட்டமிட்ட ஒகேனக்கல் திட்டம் கருநாடக மாநிலத்தின் ஒப்புதல் கிடைக்காத காரணத்தினால் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், கருநாடகத்தின் மேகதாது திட்டத்திற்கு தமிழகத்தின் ஒப்புதலைப் பெறாமலும் நடுவர் மன்றத்தின் ஆணையை மீறியும், உச்சநீதிமன்றத்தின் பரிசீலனைனையில் இப்பிரச்சினை இருப்பதைப் பொருட்படுத்தாமலும் கருநாடகம் அடாவடித்தனமாகச் செயல்படுகிறது என்ற உண்மையைக் கணக்கில் எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் தவறிவிட்டது என்பதை இப்போதாவது அதன் கவனத்திற்கு தமிழக அரசு கொண்டு செல்ல வேண்டும்.

மேக தாது அணைத் திட்டம் நிறைவேற்றப்படுமானால் கருநாடகத்தின் தயவில் மட்டுமே நாம் தண்ணீர் பெற வேண்டிய பரிதாபமான நிலைக்கு ஆளாக்கப்படுவோம். ஏற்கெனவே காவிரியின் துணை ஆறுகளான ஹேமாவதி, ஹேரங்கி, கபினி போன்றவற்றில் அணைகளைக் கட்டி தமிழகத்திற்கு இயற்கையாக ஓடி வந்த நீரின் பெரும்பகுதியை கருநாடகம் தடுத்துத் தேக்கிக் கொண்டதின் விளைவாக நமது காவிரிப் பாசனப் பகுதி பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. நடுவர் மன்றமும் உச்ச நீதிமன்றமும் அளித்தத் தீர்ப்புகளின் அடிப்படையில் நமக்கு மாதந்தோறும் அளிக்க வேண்டிய நீரை கருநாடகம் ஒரு போதும் அளிப்பதில்லை. வெள்ளக் காலங்களில் பெருகி ஓடி வரும் நீரை அந்தக் கணக்கில் காட்டி மோசடி செய்கிறது.

மேக தாது திட்டத்தையும் கருநாடகம் நிறைவேற்றி விட்டால் பிறகு காவிரிப் பாசனப் பகுதிகள் பாலைவனமாகும். இந்த அபாயமானக் காலக்கட்டத்திலாவது, அனைத்துக் கட்சிகளும் அனைத்து விவசாய அமைப்புகளும் தமிழக அரசும் ஒன்றுபட்டு நின்று மேக தாது திட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்தாக வேண்டும். நமது ஒற்றுமைக் குறைவுதான் இந்த நிலைமைக்குக் காரணம் என்பதை உணர வேண்டும்.