தெளியாத நெஞ்சங்கள் தெளியட்டும் அச்சிடுக
புதன்கிழமை, 23 செப்டம்பர் 2015 12:18

"தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் மதுவிலக்கை முழுமையாக அமுல் நடத்துவோம்'' என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியபோது. மதுவை கொண்டுவந்து மக்களைச் சீரழித்ததற்கு முதலில் மன்னிப்புக் கேட்டுவிட்டு பிறகு மதுவிலக்கைப் பற்றி பேச வேண்டும் என தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்த அறிக்கைக்கு பதில் கூறுவதாக நினைத்துக் கொண்டு நண்பர் ஒருவர் தான் நடத்தும் பத்திரிகையில் "எம்.ஜி.ஆர். மதுவிலக்கைத் தளர்த்தியபோது சட்டமன்றத்தில் நெடுமாறன் எதிர்த்துப் பேசவில்லை' என்று ஒரு இதழிலும், அடுத்த இதழில் சட்டமன்றத்தில் 1981ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையினை அளித்தபோது "மதுவிலக்கை சில நிபந்தனைகளோடு தளர்த்தப்போவதாக அறிவித்தார்.

நிதிநிலை அறிக்கை குறித்த விவாதம் நடைபெற்றபோது நெடுமாறன் மதுவிலக்கிற்கு எதிராக மூன்றே வரிகள் மட்டும் பேசினார் என்று குறிப்பிட்டுள்ளார். சட்டமன்ற நடைமுறைகள் அவருக்குத் தெரியாத காரணத்தினால் இப்படி எழுதியிருக்கிறார்.

நிதிநிலை அறிக்கையில் அரசின் கொள்கை அறிவிப்புகள் இடம் பெறும். பிறகு அந்த கொள்கை அறிவிப்புகளுக்கு சட்டமுன்வடிவுகள் கொண்டுவந்து சட்டமன்றத்தின் ஒப்புதலோடு அரசு சட்டமாக்கும். நிதிநிலை அறிக்கையின்போது கொள்கை அறிவிப்புகளை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ மட்டுமே செய்ய முடியும். விரிவாக பேச இயலாது.