தமிழர் தேசிய முன்னணியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் அச்சிடுக
புதன்கிழமை, 23 மார்ச் 2016 14:43

28-02-2016 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணிக்கு சென்னை பல்லாவரத்தில் உள்ள அருணாச்சலா மண்டபத்தில் தமிழர் தேசிய முன்னணியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது.

மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள், மகளிர், இளைஞர், மாணவர் அணிகளின் மாநில அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தமிழர் தேசிய முன்னணியின் பங்களிப்புக் குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர். மாலை வரை இக்கூட்டம் நடைபெற்றது. இறுதியாக பழ.நெடுமாறன் உரையாற்றினார். பின்னர் கீழ்க்காணும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

"தமிழர் தேசிய முன்னணி தொடங்கி சில மாதங்களே ஆன சூழ்நிலையில் இவ்வாண்டு நடைபெறவுள்ள 2016 தமிழகச் சட்ட மன்றப் பேரவைத் தேர்தலில் நேரடியாகப் பங்கேற்பதில்லை என்றும், சட்ட மன்றப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டப் பிறகு யாருக்கு ஆதரவு தருவது என்பதை முடிவு செய்து அறிவிக்கும் அதிகாரத்தைத் தலைவர் பழ. நெடுமாறன் அவர்களுக்கு அளிப்பதெனத் தமிழர் தேசிய முன்னணித் தலைமைச் செயற்குழு ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.''