தமிழின அழிவு இன்னமும் தொடர்கிறது - மாறன் அச்சிடுக
ஞாயிற்றுக்கிழமை, 01 மே 2016 12:14

ஒரு இனத்தை அழிப்பதற்கு படுகொலைகள் மூலம் மட்டுமல்ல, அவர்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதன் மூலமும் செய்ய முடியும். அவர்களின் மொழி, வாழ்விடமான வீடு, தொழில், கல்வி, கலைப் பண்பாடு போன்ற வாழ்வாதாரங்கள் அனைத்தையும் அழித்தாலே அந்த இனம் அழிந்துவிடும், படுகொலைகளை விட இது மிகவும் ஆபத்தானது. கொலை நடைபெறும்போது தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவாவது மனிதன் போராடுவான். வாழ்வாதாரங்களை அழிக்கும்போது அவற்றை முதலில் அரச நிர்வாகங்கள் மூலமும், சட்டங்கள் மூலமும், ஆக்கிரமிப்புகள் மூலமும் செய்ய முனைவான். பயமுறுத்தியும் அனைத்தையும் செய்ய முனைவான். அதுமுடியாத போது தனது இராணுவ நடவடிக்கை மூலம் அதைச் செய்ய முனைவான்.

தமிழீழத்தில் யுத்தம் முடிவடைந்து 7 வருடங்களாகியும் இதுவரை இராணுவத்தை வெளியேற்றாமல் இருப்பதற்கு இதுவே உண்மையான காரணமாகும்.

இன்றும் தமிழர்களை அடக்குவதற்கான சட்டங்கள் அப்படியே உள்ளன. எமது விகிதாச்சாரத்தை குறைக்கும் நோக்கோடு சிங்களக்குடியேற்றங்கள் வியாபாரம், விவசாயம், தொழில் ஆகியவற்றின் ஆக்கிரமிப்புகளும் நடைபெற்று வருகின்றன. மொத்தத்தில் படுகொலைகளைத் தவிர ஏனையவை அனைத்தும் தாராளமாக நடைபெற்று வருகின்றன.

2009க்குப் பின் நடைபெற்றுவரும் கீழ்குறிப்பிடப்படும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது எதிரி எமது இனத்தை எப்படி அழித்துக்கொண்டிருக்கிறான் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

- மட்டக்களப்பில் 26 வீத மாணவர்கள் போதைக்கு அடிமை - மட்டக்களப்பு பொது சுகாதார உத்தியோகத்தர் ஜே. தேவநேசன் 18-10-2015இல் அறிவிப்பு.

- யாழ்ப்பாணத்தில் 22 மாணவர்களுக்கு எயிட்ஸ் நோய்.

- சட்டவிரோத சிங்களக் குடியேற்றங்கள் தினமும் நடைபெறுகின்றன. - உதயன் நாளிதழ் செய்தி.

- தமிழ் மக்களை 19 கிராமசேவகர் பிரிவில் இருந்து ஆயுத முனையில் விரட்டிவிட்டு 11789 சிங்களவர்களை குடியேற்றி சிங்களமாவட்டமான அனுராதபுரத்துடன் இணைத்த மணலாறுப் பகுதி மீண்டும் முள்ளிவாய்க்காலுக்கு பின் தமிழ் மாவட்டமான முல்லைத்தீவுடன் இணைக்கப்பட்டது. இது சிங்கள மாவட்டமாக்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியேயாகும்.

- வட மாகாணத்தில் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் 361 பேர் நியமனத்தில் 332 பேர் சிங்களவர்கள் 29 பேர் தமிழர்கள் - வட பகுதி விவசாய அமைச்சர் அங்கரநேசன் 13-8-2015.

- மட்டக்களப்பு விவசாய ஆராய்ச்சி உதவியாளர் 99 பேர் நியமனத்தில் 75 பேர் சிங்களவர்கள்

- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா - முல்லைத் தீவில் 7-4-2015இல் தமிழர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி, சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் 300 சிங்களவர்களுக்கு கடற்படை பாதுகாப்பு - வடமாகாண மீன்பிடி அமைச்சர்.

இது எமது இனத்தை அழிக்கும் செயல்பாடுகளில் சில உதாரணங்களாகும். இப்படி பல சம்பவங்கள் தினம் தினம் நடைபெறுகின்றன.

2009க்குப் பின் சிங்களவர்களுக்கு அடிமைகளாக அவதியுறும் நிலையே உள்ளது. எமது வாழ்க்கையினை சிங்களவர்களும், சிங்கள அரசும் திட்டமிட்டு அழித்து வருகிறார்கள். யுத்தம் முடிவடைந்து 7 ஆண்டுகளாகியும் இராணுவம் அப்படியே நிலை கொண்டுள்ளது. இராணுவத்திற்கான சிங்களக் குடியேற்றங் களும் நடைபெற்றுவருகின்றது. இதைவிட சிங்கள மீனவர்களுக்காக முல்லைத் தீவு மன்னார், மாதகல் போன்ற கடற்கரைப் பகுதிகளிலும் சிங்களக் குடியேற்றங் கள் நடைபெற்று வருகின்றன. தமிழீழப் பகுதிகள் அனைத்திலும் சிங்களவர்களின் ஆக்கிரமிப்பே நடைபெறுகிறது. வியாபாரம் சிங்களவர்களின் கைகளில், மீன்பிடித்தொழில் சிங்களவர்களின் கைகளில், விவசாயம் அவர்களின் கைகளில் கூலித் தொழில்கூட அவர்களின் கைகளிலேயே உள்ளது. அரசு நிர்வாகங்களில் சிங்கள அதிகாரிகள், ஊழியர்கள் நியமனங்கள், புத்த விகாரைகள் நிர்மாணிப்புகள் என திட்டமிட்டே எம்மினத்தை அழித்து வருகிறார்கள்.