அறிக்கை: உதகை மீது உரிமை கொண்டாடும் கன்னடர் பழ. நெடுமாறன் கடும் கண்டனம் அச்சிடுக
வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2021 11:16

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை... தமிழ்நாட்டைச் சேர்ந்த தாளவாடி, உதக மண்டலம் ஆகியவற்றை கர்நாடகத்துடன் இணைக்கவேண்டுமென்று போராட்டம் நடத்தப்போவதாக கன்னட சலுவலி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்திருக்கிறார். 

கன்னட இனவெறியர்களின் அத்துமீறல் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.  ஏற்கெனவே, மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழர்கள்  பெரும்பான்மையாக வாழும் கோலார் தங்கவயல், பெங்களூர் நகரப்பகுதி ஆகியவை கர்நாடகத்துடன் சேர்க்கப்பட்டுவிட்டன. முதல் இராசராச சோழன் காலத்திலிருந்து கோலார் தங்கவயல் பகுதி சோழர் ஆட்சிக்குட்பட்டப் பகுதியாகத்தான் இருந்தது. அதற்கான கல்வெட்டுகள் இன்னமும் உள்ளன. இராசராசன், இராசேந்திரன் ஆகியோர் கட்டிய கோயில்கள் இன்னமும் கோலாரில் உள்ளன.

தஞ்சை மன்னனுக்குச் சொந்தமாக இருந்த பெங்களூர் பகுதியை 3 இலட்சம் ரூபாய்க்கு மைசூர் மன்னர் விலைக்கு வாங்கினார். இப்படித்தான் பெங்களூர் மைசூரின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இந்த வரலாற்று உண்மைகளையெல்லாம் மறைத்து இப்போது தமிழ்நாட்டுப் பகுதிகள் மீதும், உரிமை கொண்டாட கன்னடவெறியர்கள் முயற்சி செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.