அரேபியர்களுக்குப் பரிவு காட்டும் பைடன் ஈழத் தமிழர்களுக்கும் பரிவு காட்டுவாரா? அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 02 ஆகஸ்ட் 2022 11:01

 

painden-1பாலஸ்தீனத்தில் உள்ள பெத்தலகெம் நகர் இயேசுபிரான் பிறந்த மண்ணாகும். அதனால்தான் என்னவோ அமெரிக்க அதிபர் பைடன் அவர்களுக்கு அரேபிய மக்களின் அவலம் குறித்துக் கழிவிரக்கம் கொண்டிருக்கிறார். 2022 சூலை 28ஆம் நாள் அந்நகருக்குச் சென்ற பைடன் அவர்கள் பாலஸ்தீனியத் தலைவர் முகம்மது அப்பாஸ் அவர்களை சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது பின்வருமாறு கூறியுள்ளார்-

 

 

“பாலஸ்தீனிய மக்கள் குறித்து எனது இதயத்தில் வேதனை ஏற்பட்டுள்ளது. அம்மக்களின் துயரத்தையும், ஏமாற்றத்தையும் அமெரிக்கா உணர்ந்துள்ளது. சுதந்திரத்தையும், இறைமையையும் பெற்ற ஒரு நாட்டை அமைத்துக்கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு. இந்த மண்ணில் தோன்றிய மிகப் பழமையான இருவேறு தேசிய இனங்களும் அருகருகே அமைதியாகவும், பாதுகாப்புடனும் வாழும் உரிமைகள் உண்டு. பாலஸ்தீனியர்களும், இசுரேலியர்களும் பேச்சுவார்த்தையின் மூலம் தங்கள் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கு அமெரிக்கா உறுதியாக உதவும்” எனக் கூறியுள்ளார்.

பாலஸ்தீனிய அரேபிய மக்களுக்கு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பைடன் வழங்கியுள்ள இந்த வாக்குறுதியை ஈழத்தமிழ் மக்களுக்கும் அளிக்க அவர் முன்வரவேண்டும். இரு இனங்களின் பிரச்சனைகளும் வெவ்வேறு அல்ல. பாலஸ்தீன அரேபிய மக்கள் எவ்வாறு ஒரு தனி தேசிய இனமோ, அவ்வாறே ஈழத் தமிழர்களும் தனித்துவம் வாய்ந்த ஒரு தேசிய இனமாவார்கள்.

ஈழத் தமிழர்களும் பெரும் துயரத்திற்கும், ஏமாற்றத்திற்கும் இனப்படுகொலைக்கும் ஆளாகித் தவிக்கிறார்கள். 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அவர்களின் உரிமைப் போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை. பைடன் அவர்கள் தனது கவனத்தை ஈழத் தமிழர்களின் பிரச்சனையிலும் திருப்பி அவர்களுக்கு சுதந்திரமும், இறைமையும் பெற்ற ஒரு நாட்டை அமைத்துக்கொள்ளும் உரிமை உண்டு என்பதை உணர்ந்து அவர்களுக்கும் உதவ முன் வரவேண்டும்.”

Â