மாயமாக மறைந்த மலேசிய விமானம் 2 ஆண்டுகளுக்கு முன்பே கணித்துக் கூறிய தமிழ் விஞ்ஞானி அச்சிடுக
சனிக்கிழமை, 02 ஏப்ரல் 2016 14:43

கடந்த 2014ஆம் ஆண்டு மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்ஹெச்370 விமானம் இந்துமாக் கடலின் மீது பறந்த சென்றுகொண்டிருந்தபோது திடீரென மாயமாய் மறைந்துவிட்டது. கடந்த 2 ஆண்டு காலமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்பட பல வல்லரசுகள் விமானத்தைக் கண்டுபிடிக்கச் செய்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை.

ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானியான முனைவர் டி.ஜெயப்பிரபு 2 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 31-5-2014 அன்று இந்த விமானம் எங்கு விழுந்தது என்று சரியாகக் கணித்துக் கூறினாரோ. அதே இடத்தில் இப்போது அந்த விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

மடகாஸ்கார் ரியூனியன் பகுதியில் மலேசிய விமானத்தின் இரு பாகங்கள் இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த உண்மையை கண்டறிந்து கூறிய தமிழ் விஞ்ஞானியின் சாதனை உலகெங்கும் வியப்பலைகளை உருவாக்கியுள்ளது.

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் ஆய்வு ஆலோசகராக இருக்கும் முனைவர் ஜெயப்பிரபு தான் கண்டுபிடித்துள்ள "காலம்' என்னும் கருவியின் துணைகொண்டு இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

தான் கூறிய இடத்திலேயே விமானம் விழுந்திருப்பதை இன்று உலகம் ஏற்றுக்கொண்டிருப்பது தனக்குப் பெருமை அளிப்பதாக அவர் கூறியிருக்கிறார். இதையொட்டி அவர் அளித்துள்ள நேர்காணல் கீழே அளிக்கப்படுகிறது

கேள்வி : இந்த விமானம் காணாமல் போனதன் பின்னால் செயற்பட்டவர்களின் அடிப்படை நோக்கம் என்ன..?

ஜெய : உலகத்தின் அறிவியலுக்கு மாபெரும் சவால்விடவே இது செய்யப்பட்டிருக்கிறது, இதுவரை உலகின் வல்லரசுகளாகவும், ஆற்றலாளர்களாகவும் கருதப்பட்டவர்கள் அந்த முக்கியத்துவத்தை தக்கவைக்க முடியாது தோல்வியடைந்தார்கள் என்ற சவால் இந்தச் செயலில் இருக்கிறது.

இது ஏதோ ஒரு விமானம் காணாமல் போனது- அதில் பயணித்தவர்களுடைய உயிர்களின் பிரச்சனை என்பதைவிட அதற்கும் அப்பால் 21ம் நூற்றாண்டின் ஒட்டுமொத்த உலகப் பிரச்சனை. மேலும் இது மலேசிய – சீன பிரச்சனை அல்ல..

கேள்வி : அதற்கான ஆதாரங்கள் என்ன..?

ஜெய : முதலாவது அந்த விமானத்திற்குள் உலகத்தின் இன்றைய விஞ்ஞானத்திற்கே சவால் விடக்கூடிய முக்கிய தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒன்றாகப் பயணித்திருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் அல்லது பலர் விமானத்தில் இருந்த மூலப்பொருட்களை ஆதாரமாக வைத்து "செயற்கைக் கோள்'களில் இருந்து விமானத்தை மறையச் செய்யும் வல்லமை கொண்டிருந்திருக்கலாம்.

ஒரு திண்மப் பொருளை பல கூறுகளாக்கி மறையச் செய்து இன்னோரிடத்தில் இணைக்க முடியும் என்ற ஐன்ஸ்டைனின் கருத்து நமது மனதில் ஒரு சுற்று வந்து போகிறது.

கேள்வி : அப்படி உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவும் சாதனையைப் படைப்பதற்கு வசதியான மூலப்பொருட்கள் வேண்டும். அப்படி ஏதாவது அதில் இருந்துள்ளதா..?

ஜெய : மங்கோஸ்ரீன் என்ற மூலப் பொருள் சுமார் மூன்றரை டன்கள் விமானத்தில் இருந்திருக்கிறது.. இதை ஆதாரமாக வைத்து பல அற்புத சாதனைகளைப் புரியலாம். இந்த மூலப் பொருட்களை அடிப்படையாக வைத்துத்தான் மேற்கண்ட சவாலை விடுத்திருக்கிறார்கள், வெங்காயம்.. வெள்ளைப்பூடு போன்ற கலவைத்தன்மை கொண்ட அபூர்வ இரசாயனப் பொருள் இது..

இந்தப் பொருளில் இருந்து உருவாக்கக்கூடிய புதுமை விளைவுகள் பற்றி நன்கு தெரிந்தவர்களால் சில விடயங்களை சாதிக்க முடியும்.. (அதன் விஞ்ஞான செயற்பாடுகளை விளக்குகிறார்.)

அந்த விளக்கங்கள் நமக்கு மூன்று வித எண்ணங்களை ஏற்படுத்துகின்றன.

01. முதலாவது மலேசிய அரசு ஏதோ ஓர் உண்மையை மறைக்கிறது என்று சீனர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள்.

02. விமானிகளில் ஒருவர் உலகின் கண்களில் விரலைவிட்டு ஆட்டக்கூடிய அசாதாரண திறமை படைத்தவர் என்ற மலேசிய உளவுப்பிரிவுத் தகவல்.

03. விமானத்தில் சீன விஞ்ஞானிகள் பயணித்தார்கள், விமானத்திலும் சில முக்கிய மர்மப் பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டிருந்தன என்ற இதர செய்திகள்.

கேள்வி : இவைகளின் கூட்டு விளைவுதான் இந்த விவகாரம் என்கிறீர்களா..?

ஜெய : இவைகள் அனைத்தும் தாராளமாகப் போதுமானவை. விமானத்தை ராடரில் இருந்து மறைத்து.. தேடக்கிடைக்காத இடத்திற்குக் கொண்டு செல்லப் போதுமானவை.

கேள்வி : ஒருவேளை மாற்றுக்கிரகத்தில் இருந்து இதைக் கடத்தியிருக்கலாமா..?

ஜெய : சாத்தியமே இல்லை.. விமானம் மறைந்துபோன 01.31 மணியளவில் அந்தப் பிராந்தியத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட விமானங்கள் பறந்துபோயுள்ளன. உலகின் மிக முக்கியமான பயணிகள் விமானங்கள் கடந்துபோகும் வான் சந்தியில் மலேசிய விமானத்தை மட்டும் மாற்றுக்கிரகத்தில் இருந்து வந்து கடத்தி இருப்பார்கள் என்று கருத முடியாது.

கேள்வி : இயற்கைச் சீற்றத்தால் அது நடந்திருக்காதா..?

ஜெய : இந்தப் பிராந்தியத்தில் அது சாத்தியமே இல்லை.. சூரியன் உதயமாகும் பகுதி, குளிரும் – சூடும் கலக்கும் ஓர் அபரிமிதமான நேரத்தில் அப்படியொரு காலநிலை சீற்றத்திற்கு வாய்ப்பில்லை.. ராடர்களில் அதற்கான தகவலும் இல்லை.

கேள்வி : யாராவது பயங்கரவாதிகள் கடத்தியிருப்பார்களா..?

ஜெய : கிடையாது. அப்படியொரு சம்பவம் நடந்திருந்தால் இதுவரை அவர்கள் அதற்கு உரிமை கோரியிருப்பார்கள். ஏதாவது ஒரு தடயம் கிடைத்திருக்கும். ஒன்றுமே இல்லையே?

கேள்வி : விமானத்தின் உள்ளே இருந்த யாராவது ஒரு மனோநிலை குழம்பியவர் இதைச் செய்திருக்கலாமா?

ஜெய : செய்திருந்தால் இப்போதைக்கு விமானத்தின் பாகங்கள் கண்டிப்பாகக் கிடைத்திருக்கும். எங்குமே எதுவுமே இல்லை.. அனைத்துத் தேடுதல்களும் ஏறத்தாழ தோல்வியிலேயே முடிவடைந்துவிட்டன.

கேள்வி : சரி.. அப்படியானால் இதனால் செய்தவர்களுக்கு என்ன நன்மை..?

ஜெய : யாரோ ஒரு தனிமனிதனோ அல்லது குழுவோ உலக நாடுகளுக்கு விட்டுள்ள மாபெரும் சவால்தான் இந்த விவகாரம்.. இந்தச் சவாலின் வெற்றியும், சாகசமுமே அவர்கள் தேடிய நன்மை. இந்தத் தேடுதல் முயற்சியில் ஈடுபட்ட உலகத்தின் பலமிக்க 20 நாடுகளுக்குப் படு தோல்வியைக் கொடுத்துள்ளார்கள். விமானத்தைவிட நாளைய வரலாறு அவர்கள் சாதனையைப் பேசப்போகிறது.

01. "செயற்கைக் கோளால் உலகத்தை ஆள்வோம்' என்பவர்கள் தோல்வி கண்டுள்ளார்கள்.

02. நீர்மூழ்கிக் கப்பலாலும், கறுப்புப் பெட்டியாலும் தடயத்தைக் காணலாம் என்று மார்தட்டிய உலக விஞ்ஞானம் விழிபிதுங்கி நிற்கிறது.

03. ஒருவராலும் தடயம் காணமுடியாதபடி விமானம் மறைக்கப்பட்டுவிட்டது..

கேள்வி : அமெரிக்காவுக்கு எட்வேட் சுனோவ்டன் விட்டது மட்டுமா சவால் இல்லையே அதைவிட பெரிய சவால் அல்லவா இது.

ஜெய : இதுவரை மனிதர்கள் அறிவின் உச்சத்தால் தொடப்பட்டதைவிட ஒரு படி மேலான சிகரத்தை தொட்ட எக்ஸ் என்ற அந்த நபரோ அல்லது நபர்களோ விட்டிருக்கும் இந்தச் சவாலை வெல்வதற்கு புதிய ஏற்பாடுகள் அவசியம்.. இல்லையேல் 21ம் நூற்றாண்டு இதுபோன்ற மிகப்பெரிய சவால்களை சந்திக்கும்.. இது தொடக்கமல்ல ஆரம்பம்.

(இருப்பினும் அவர் ஒரு முடிவையும் சொல்கிறார்.. தன்னை தொடர்பு கொண்டால் உதவ முடியும் என்று உறுதியாகவும், தன்னம்பிக்கையுடனும் சொல்கிறார். (தமிழ் விஞ்ஞானி ஜெயப்பிரபு தனது அறிவாற்றல் மீது கொண்டுள்ள தன்னம்பிக்கை தமிழர்களைப் பெருமிதம் கொள்ள வைத்துள்ளது)

கேள்வி : இதை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு எடுத்துரைத்தால் என்ன..?

ஜெய : ஒரு கறுப்புநிற தமிழனின் வாயால் வரும் செய்தி உண்மையாக இருந்தாலும் பலர் அதை அங்கீகரிப்பதில்லை. நான் வாழும் தமிழ் நாட்டிலேயே நிறைய அடிபட்டுவிட்டேன்.

***
மலேசிய விமானம் மறைந்துள்ளது மர்மமோ, புதுமையோ அல்ல. அறிவியலுக்கு விடப்பட்டுள்ள புதிய சவால் என்று கூறும் ஜெயப்பிரபு.. குவாண்டம் சூப்பர் கம்யூட்டர் போல காலம் என்ற கணினியை உருவாக்கி வருகிறார்.

காலம் என்கின்ற புதிய கணினி அதிர்ச்சி மிக்க வெளியீடாக மலர்ந்தாலும் ஆச்சரியப்பட இல்லை.

அவருடைய கருத்துக்கள் இப்போது சீனா, மலேசிய ஊடகங்களை நெருங்கிக் கொண்டிருக்கின்றன.. இந்த விவகாரத்தில் ஜெயப்பிரபுவின் கருத்துக்களைச் சீர்தூக்கினால் விரைவில் ஒரு திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையை நம் மனதில் அவர் வாதம் திடமாக விதைக்கிறது..
அப்படியொரு திருப்பம் ஏற்பட்டால் அது சரியாக இருந்தால் ஜெயப்பிரபுவின் எதிர்காலம் மட்டுமல்ல.. தமிழினத்தின் புகழும் வான் தொடும்.