9 ஆண்டு காலமாக சிறப்பு முகாமில் வாடும் தமிழர்கள் விடுதலை செய்யுமாறு பழ.நெடுமாறன் வேண்டுகோள் அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2016 14:41

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
செய்யாறு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த 14 ஈழத் தமிழர்கள் திடீரென நேற்று திருச்சி முகாமுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வற்புறுத்தி அவர்கள் சாகும்வரை உண்ணா நோன்பை மேற்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களில் ரங்கநாதன் என்பவர் 8 ஆண்டு காலமாகவும், "பகீரதன் என்பவர் 9 ஆண்டு காலமாகவும் மற்றவர்கள் ஆண்டுக் கணக்கிலும் எத்தகைய விசாரணையும் இல்லாமல் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மனிதநேயமற்ற முறையில், இவர்களை சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். வழக்குகள் இருக்குமானால் இவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். எத்தகைய விசாரணையும் இல்லாமல் அடைத்து வைத்திருப்பதை அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என தமிழக அரசை வற்புறுத்துகிறேன்.