மாணவர்களை மிரட்டும் காவல்துறை- பழ.நெடுமாறன் கண்டனம். அச்சிடுக
வெள்ளிக்கிழமை, 07 மார்ச் 2014 16:06

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

தமிழக சட்ட மன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்து அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானமான ""உலக நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் நடுவில் தமிழீழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்,

இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலைகள் குறித்து சுதந்திரமான சர்வதேச புலன் விசாரணை நடத்தப்படவேண்டும்.'' ஆகிய இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாணவர்கள் கோயம்பேட்டில் தனியார் இடத்தில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

தமிழக மக்கள் சார்பில் முதலமைச்சர் முன்மொழிந்த இந்தக் கோரிக்கைகளை இந்திய அரசு ஏற்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானமாக கொண்டு வரவேண்டும், என போராடுகிற மாணவர்களை தமிழக காவல்துறை மிரட்டுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தன்னுடைய கோரிக்கைக்கு ஆதரவாகப் போராடும் மாணவர்களை மிரட்டி ஒடுக்குவதற்கு முற்படும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் முன்வரவேண்டும் என வற்புறுத்துகிறேன்.