கதிராமங்கலம் போராளிகள் பிணையில் விடுதலை அச்சிடுக
வெள்ளிக்கிழமை, 01 செப்டம்பர் 2017 12:36

கதிராமங்கலம் காக்கப் போராடியதற்காகப் பொய் வழக்குகள் புனையப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட பேராசிரியர் த. செயராமன், தோழர் க. விடுதலைச் சுடர் மற்றும் கதிராமங்கலம் தோழர்கள் கா. தருமராசன், இரா. முருகன், சு. சிலம்பரசன், ரெ. செந்தில்குமார், சே. சந்தோஷ், ப. சாமிநாதன், கோ. ரமேஷ், இரா. வெங்கட்ராமன் ஆகிய 10 தோழர்கள் 11-08-2017 அன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

பேரா. த. செயராமன் அவர்கள் நாள்தோறும் மதுரை நீதிமன்றத்திலும், தோழர் ரமேஷ் பாபநாசம் நீதிமன்றத்திலும் மற்ற தோழர்கள் திருச்சி நீதிமன்றத்திலும் கையெழுத்துப் போட வேண்டுமென்ற நிபந்தனையுடன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை 09-09-17 அன்று பிணை ஆணை வழங்கியது. தோழர்களின் பிணைக்கான மேல் முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர் இராகுல் தாக்கல் செய்தார். இப்பிணை மனு விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் சிறப்பாக வாதாடினார். தோழர்களை பிணை எடுக்கும் முயற்சியில் தஞ்சை வழக்கறிஞர்கள் அ. நல்லதுரை, த.சு. கார்த்திகேயன் மற்றும் கரிகாலன், திருச்சி வழக்கறிஞர் கென்னடி, மயிலாடுதுறை வழக்கறிஞர் குபேந்திரன் ஆகியோர் ஈடுபட்டனர்.

11-08-2017 அன்று காலை சிறையிலிருந்து விடுதலையான தோழர்களுக்கு சிறை வாயிலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்ட தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், தமிழர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் ஐயனாபுரம் முருகேசன், துணைத்தலைவர் ம. பொன்னிறைவன், மாவட்டச் செயலாளர் கலைச் செல்வம், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் அ. விடியல் (அ. ஆனந்தன்) தஞ்சை மாவட்டச் செயலாளர் குழ. பால்ராசு, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர்  ந. வைகறை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் கோ. மாரிமுத்து, திருச்சி மாநகரச் செயலாளர் மூ.த. கவித்துவன், பொதுக்குழு உறுப்பினர்கள் இராசரகுநாதன், க. தீந்தமிழன், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் ம. இலட்சுமி, வெள்ளம்மாள் தஞ்சை மாநகர் குழு உறுப்பினர் மா. சீனிவாசன் உள்ளிட்டத் தோழர்கள் பங்கேற்றனர்