துச்சாதனனுக்குச் சான்றளிக்கத் துடிக்கும் சகுனி- பழ. நெடுமாறன் அச்சிடுக
திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018 12:09

இலங்கையின் முன்னாள் குடியரசுத் தலைவர் இராஜபக்சேக்கு "பாரத ரத்னா" விருது வழங்கிப் பெருமைப்படுத்த வேண்டும் என இந்திய அரசுக்கு சுப்பிரமணிய சுவாமிஅறிவுரை கூறியுள்ளார்.  

இந்திய அரசால் அளிக்கப்படும் மிக உயர்ந்த விருது பாரத ரத்னா என்பதாகும். நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று எண்ணற்ற தியாகம் புரிந்த இராஜாஜி, ஜவகர்லால் நேரு, வல்லபாய் படேல், அபுல்கலாம்  ஆசாத்,  இராசேந்திர பிரசாத், லால்பகதூர் சாஸ்திரி, காமராசர், இந்திராகாந்தி, வினோபா பாவே, ஜாகீர் உசேன் போன்ற பெருந்தலைவர்களுக்கும், எஸ். இராதாகிருஷ்ணன், அம்பேத்கர் போன்ற அறிஞர்களுக்கும், சி.வி. இராமன், விசுவேசுவரய்யா, ஏ.பி.ஜே. அப்துல்கலாம், அமர்த்தியா சென் போன்ற அறிவியல் அறிஞர்களுக்கும் இன்னும் பல்வேறு துறைகளில் தொண்டாற்றிய பெரு மக்களுக்கும் இந்த விருது வழங்கப்பெற்றுள்ளது.
வெளிநாடுகளைச் சேர்ந்த அன்னை தெரேசா, கான் அப்துல் கபர்கான், நெல்சன் மண்டேலா போன்ற  மிகச் சிறந்த மனிதநேய தொண்டாற்றிய பெருமக்களுக்கும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பட்டியலில் இராசபக்சேயைச் சேர்க்கவேண்டும் என சுப்பிரமணிய சுவாமி கூறுவது ஏற்கெனவே இவ்விருது பெற்றவர்களையும், ஒட்டு மொத்தத்தில் இந்தியாவையும் அவமதிக்கும் செயலாகும்.   
2009ஆம்  ஆண்டில் இலங்கையில் இராசபக்சேயின் ஆட்சியில்  1,50,000க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ்  மக்கள் பதறப்பதறப் படுகொலை செய்யப்பட்டார்கள். 3,00,000க்கும்  மேற்பட்ட மக்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுப் பல்வேறு கொடுமைகளுக்கும், சித்ரவதைகளுக்கும் ஆளானார்கள்.
இலங்கையில் நடைபெற்ற போரில் சிங்கள இராணுவம் நடத்திய இனப்படுகொலைகள், மனித உரிமை  மீறல்கள் ஆகியவைக் குறித்து அனைத்து நாட்டு  நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமென 2013ஆம் ஆண்டில் ஐ.நா.  மனித உரிமை ஆணையம் தீர்மானம் நிறைவேற்றியது. அத்தீர்மானத்தை ஏற்று மதிப்பதற்கு இராஜபக்சே மறுத்தார். ஐ.நா. தீர்மானம் "எங்கள் நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்” என பகிரங்கமாகக் கண்டித்தார். அதற்காக  அவருக்கு பாரத ரத்னா  விருது வழங்கவேண்டுமென சுப்பிரமணிய சுவாமி  கூறுகிறாரா?  
டப்ளின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் முழுமையாக விசாரணை நடத்தி அளித்தத் தீர்ப்பில் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையே  என்றும் இது குறித்து அனைத்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியது. இந்தத் தீர்ப்பாயத்தில் இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் நீதிநாயகம் இராசேந்திர சச்சார் அங்கம் வகித்தார். இதைத் தொடர்ந்து செர்மனியில் கூடிய சர்வதேசத் தீர்ப்பாயம் இலங்கையில் அமைதி மண்டலமாக அரசினால் அறிவிக்கப்பட்ட பகுதியில் தஞ்சம் புகுந்த அப்பாவித் தமிழர்கள் மீது கொத்துக் குண்டுகளை வீசி அவர்களைச் சிங்கள இராணுவம் கொன்று குவித்தது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே இதுகுறித்து அனைத்து  நாட்டு  விசாரணை நடத்தப்படவேண்டுமென வற்புறுத்தியது.
2009ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள், போர்க்  குற்றங்கள் தொடர்பாக அனைத்து  நாட்டு  விசாரணை நடத்தப்படவேண்டும் என 74 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை 17-2-2014 அன்று ஐ.நா. மனித  உரிமை  ஆணையத்திற்கு  அனுப்பினார்.  அவருக்குப்பின் ஐ.நா. மனித உரிமை ஆணையப் பொறுப்பை  ஏற்ற ஜெயின்ட் ரா அல் உசேன் "இலங்கையில் மனித உரிமை செயற்பாட்டாளரும், சமூகத் தொண்டு  நிறுவனங்களும் சிங்கள அரசால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். இதன் விளைவாக அரசுக்கு எதிராகச் சாட்சியம் அளிக்க முன்வர மக்கள் அஞ்சுகின்றனர்.  ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு ஒத்துழைப்புத்தர சிங்கள அரசு மறுத்து வருகிறது. இதற்கு எதிராகப் பரப்புரை செய்கிறது” என்று குற்றம் சாட்டினார்.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தையோ, அதன் விசாரணையையோ கொஞ்சமும் மதிக்காத போக்கில் நடந்துகொண்டதற்காகவும் ஐ.நா. பேரவையின் கோட்பாடுகளைத் துச்சமாக மீறியும் செயல்பட்டதற்காகவும் இராஜபக்சேயிக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டுமென சுப்பிரமணிய சுவாமி பரிந்துரை செய்கிறாரா?
முன்னாள் தலைமையமைச்சரும், பா.ஜ.கவின் முதுபெரும் தலைவருமான வாஜ்பாய் அவர்களுக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் வாழ்ந்த காலத்திலேயே அவருக்கு எதிராகச் செயல்பட்ட சுப்பிரமணிய சுவாமி, அவர் மறைந்தப் பிறகும் அவரோடு சமமாக இராஜபக்சேயிக்கு பாரத ரத்னா வழங்கவேண்டும் என கூறுவதின் மூலம் அவரையும், பா.ஜ.க.வையும் மீண்டும் அவமதித்துள்ளார்.
மகா பாரதத்தில் சூதாட்டக் கதை விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அதை பாரதி பாஞ்சாலி சபதம் என்ற பெயரில் புதுமையானதொரு காப்பியமாகப் படைத்தான். அந்த காப்பியத்தில் சூதாட்டத்தில் நாடு, நகரம் எல்லாவற்றையும் இழந்த தருமன் தனது தம்பிமார்களையும் பணயம் வைத்துத் தோற்கிறான்.  இறுதியில் தன்னையும் பணயமாக வைத்து இழக்கிறான். அப்போது சகுனி வஞ்சகவலையை விரிக்கிறான்.  தருமனிடம் பின்வருமாறு சகுனி கூறுவதாகப்  பாரதி பாடியிருக்கிறான்&
இன்னும் பணயம் வைத்தாடுவோம்; - வெற்றி
இன்னு ம்இ வர்பெற லாகுங்காண்,
பொன்னுங்  குடிகளுந் தேசமும் - பெற்றுப்
பொற்பொடு போதற் கிடமுண்டாம்; - ஒளி
மின்னு மமுதமும் போன்றவள் - இவர்
மேவிடு தேவியை வைத்திட்டால்,  அவள்
துன்னு மதிட்ட முடையவள் -  இவர்
தோற்ற தனைத்தையு மீட்டலாம்.
என்றந்த மாம னுரைப்பவே - வளர்
இன்பம் மனத்தி லுடையனாய் -  மிக
நன்றுநன் றென்று சுயோதனன் - சிறு
நாயொன்று தேன்கல சத்தினை - எண்ணித்
துன்று முவகையில் வெற்றுநா - வினைத்
தோய்த்துச் சுவைத்து மகிழ்தல் போல் - அவன்
ஒன்றுரை யாம லிருந்திட்டான் - அழி
வுற்ற துலகத் தறமெலாம்.
சகுனியின் சூது அறியாமல் தருமனும், அதற்கிசைந்து பாஞ்சாலியை பணயம்  வைத்து ஆட  முன் வருகிறான். அதைக் கண்ட துரியோதனன்  தேன் கலத்தினை  நக்குவது  போல் எண்ணி வெறும் நாக்கினைச் சுவைத்து  மகிழும் நாயைப்போன்று  மகிழ்ந்தான் எனப் பாரதி சுவைபடக் கூறுகிறான்.
சூதாட்டத்தில் பாஞ்சாலியைத் தருமன் பணயம் வைத்ததை பாரதி கூறுவது நமது உள்ளத்தை உருக்கும்.
 பாவியர் சபைதனி லே - புகழ்ப்
பாஞ்சால நா ட்டினர் - தவப்பய னை
ஆவியி லினியவளை - உயிர்த்
தணிசுமந் துலவிடு செய்யமு தை,
ஓவிய நிகர்த்தவ ளை  -  அரு
ளொளியினைக் கற்பனைக் குயிரத னைத்
தேவியை, நிலத்திரு வை,  - எங்குந்
தேடினுங் கிடைப்பருந் திரவியத் தை,
படிமிசை யிசையுற வே - நடை
பயின்றிடுந் தெய்விக மலர்க்கொடி யைக்
கடிகமழ் மின்னுரு வை - ஒரு
கமனியக் கனவினைக் காதலினை,
வடிவுறு பேரழகை - இன்ப
வளத்தினைச் சூதினிற் பணயமென்றே
கொடியவ ரவைக்களத் தில் - அறக்
கோமகன் வைத்திடல் குறித்துவிட்டான்.
தருமனும் பாஞ்சாலியைப் பணயம் வைத்துச் சூதாடிச் சகுனியிடம் தோற்கிறான். அதைப் பாரதி கூறும் விதம் அற்புதமானது. எண்ணி எண்ணி சுவைக்கதக்கது.
வேள்விப் பொருளினை யே  - புலைநாயின்முன்
மென்றிட வைப்பவர்  போல்,
நீள்விட்டப் பொன்மாளி  கை  - கட்டிப்  பேயினை
நேர்ந்து குடியேற்றல்  போல்,
ஆள்விற்றுப் பொன்வாங்கி  யே - செய்த பூணையோர்
ஆந்தைக்குப்  பூட்டுதல்  போல்,
கேள்விக் கொருவரில்லை - உயிர்த்தேவியைக்
கீழ்மக்கட் காளாக்கி னான்.
மாமன் சகுனி மூலம் சூதாட்டத்தில் வெற்றி பெற்ற துரியோதனன் பாஞ்சாலியை இழுத்துவர விதுரனுக்கு ஆணையிடுகிறான். அவன்  மறுக்கவே தேர்ப் பாகனை அனுப்புகிறான். அவன் சென்று பாஞ்சாலியிடம் அரசனின் ஆணையைப் பணிந்து கூறுகிறான். அப்போது  பாஞ்சாலி பின்வருமாறு பதிலுரைக்கிறாள்&
சூதர் சபைதனிலே தொல்சீர் மறக்குலத்து
மாதர் வருதல் மரபோடா?  யார்பணியால்
என்னை யழைக்கின்றாய்? என்றாள். அதற்கவனும்
மன்னன் சுயோதனன்றன் வார்த்தையினால் என்றிட்டான்.
நல்லது  நீ சென்று நடந்தகதை கேட்டு வா,
வல்ல சகுனிக்கு மாண்பிழந்த நாயகர்தாம்
என்னை முன்னே கூறி யிழந்தாரா? தம்மையே
முன்ன மிழந்து முடித்தென்னைத்  தோற்றாரா?
சென்று சபையில்இச் செய்தி தெரிந்துவா"
சூதாட்டத்தில் தன்னை வைத்துத் தோற்றப்பின் தருமன் என்னை வைத்துத்  தோற்றானா? என்னை வைத்து தோற்றப்பின், அவன்  தன்னை வைத்து தோற்றானா? என்ற கேள்வியினைப் பாஞ்சாலி எழுப்புகிறாள். பாகனும்  அதை அப்படியே  போய் துரியோதனனிடம் கூறுகிறான். வெகுண்டெழுந்த துரியோதனன் அவனைச் சினந்து மீண்டும் பாஞ்சாலியை அழைத்து வரச் சொல்கிறான். அவ்வாறே அவனும் போய்  அழைத்தபோது பாஞ்சாலி-
"நாயகர் தாந்தம்மைத் தோற்ற பின் - என்னை
நல்கு முரிமை  அவர்க்கில்லை - புலைத்
தாயத்தி  லேவிலைப் பட்டபின் என்ன
சாத்திரத் தாலெனைத் தோற்றிட் டார்? அவர்
தாயத்தி  லேவிலைப் பட்டவர்;  - புவி
தாங்குந் துருபதன் கன்னி நான் - நிலை
சாயப் புலைத்தொண்டு சார்ந்திட்டால்  -  பின்பு
தார முடைமை யவர்க்குண்டோ!
என்ற கேள்வியை எழுப்புகிறாள். பதில் கூற முடியாத  பாகன் மறுபடியும் துரியோதனனிடம் போய்ப் பாஞ்சாலியின் கேள்வியைக் கூறுகிறான். அதைக் கண்டு சினந்த அவன் தன் தம்பி துச்சாதனனை அழைத்துப் பாஞ்சாலியை இழுத்துவரச் செய்கிறான். வீட்டிற்கு விலக்காகி ஒற்றை ஆடையுடன் இருந்த பாஞ்சாலியின் கூந்தலினைப் பிடித்து இழுத்துச் செல்கிறான். வழிநெடுக நின்றவர்கள்-
"என்ன கொடுமையிது" வென்று பார்த்திருந்தார்,
ஊரவர்தங் கீழ்மை யுரைக்குந் தரமாமோ?
வீரமிலா நாய்கள், விலங்கா மிளவரசன்
தன்னை மிதித்துத்  தராதலத்திற் போக்கியே,
பொன்னையவ ளந்தப்  புரத்தினிலே, சேர்க்காமல்,
நெட்டை, மரங்களென நின்று புலம்பினார்.
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?
பேரழகு கொண்ட பெருந்தவத்து நாயகியைச்
சீரழியக் கூந்தல் சிதையக் கவர்ந்துபோய்க்
கேடுற்ற மன்னரறங் கெட்ட சபைதனிலே
கூடுதலு மங்கேபோய்க் 'கோ' வென் றலறினாள்.
பீஷ்மன் உட்பட பல பெருமக்கள் வீற்றிருந்த அந்த அவையில்  அவளுக்கு  நீதி கிடைக்கவில்லை. "பேய் அரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என அவள் கூறுவதாக பாரதி எழுதுகிறான். மாடு நிகர்த்த துச்சாதனன் அவள் மைக்குழல் பற்றி இழுக்கிறான். ஆடை குலைவுற்று அவள் அழுது துடிக்கிறாள். அதன் விளைவாக பீமனும், அர்ச்சுனனும் அந்த அவையில் சூளுரைக்கிறார்கள். பிற்காலத்தில் மூண்டெழுந்த பாரதப் போரில் கவுரவர்களின் உயிர்களைப் பறித்து தங்களின் சபதத்தை நிறை வேற்றுகிறார்கள் என்பது பாரதக் கதை.
பாஞ்சாலியின் துகிலுரிந்து அவை நடுவில் மானம் பறித்த துச்சாதனனை துரியோதனன் மட்டுமே பாராட்டினான். ஆனால், இறுதியில் பாரதப் போரில்  பீமனால் துடிதுடிக்கக்  கொல்லப்பட்டான்.  ஈழத் தமிழரின் மானத்தையும்,  உயிரையும் குடித்த இராஜபக்சேயை ஐ.நா. மன்றம் உள்பட உலகம் கண்டித்தது. அனைத்து நாட்டு நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டிய ஒருவருக்கு பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரை  செய்கிறார் சுப்பிரமணிய சுவாமி.
ஈழத் தமிழர் என்னும் பாஞ்சாலியை மானபங்கம் படுத்திய இராஜபக்சே என்னும் துச்சாதனனைப் பற்றியும், பாஞ்சாலியை ஒத்த ஈழத் தமிழர் வெஞ்சினம் குறித்தும், துச்சாதனர் கூட்டத்தினருக்கு நேர்ந்த கதி குறித்தும் புதிய பாஞ்சாலி சபதம் எழுதப் பாரதி இன்று இல்லை.