தமிழ் இலக்கிய வரலாறு - தமிழர் வரலாறு மாற்றம் பெறும் - பழ. நெடுமாறன் அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 01 அக்டோபர் 2019 10:32

 2015-2016 ஆம் ஆண்டுகளில் கீழடியில் இரண்டு கட்ட  ஆய்வுகள் இந்தியத் தொல்லியல் துறையின் சார்பில் அமர்நாத் இராமகிருட்டிணன் குழுவினரால் நடத்தப்பட்டது. இவற்றின் மூலம் 5300 பொருட்கள் கண்டறியப்பட்டன.

கீழடியின் தொன்மை குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியான அகழாய்வுகள் நடத்தப்படவேண்டும் என அவர் கூறினார். முதல் இரண்டு கட்ட ஆய்வுகளில் கிடைத்த பொருட்கள் காலக் கணிப்பு செய்யப் படுவதற்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு பெற்ற முடிவுகளின்படி  கீழடியின் காலம்  கி.மு. 220 - 160 (கி.மு. 3ஆம் நூற்றாண்டு) என்பது அறியப்பட்டது. மேலும் நகர்ப்பற நாகரிகத்திற்கான சிறந்த சான்றுகள் கிடைத்தன. சுடப்பட்ட மண் குழாய்களால் அமைக்கப்பட்ட கழிவு நீர் அமைப்புகள், செங்கல்லால் உருவாக்கப்பட்ட தளங்கள், உற்பத்தித் தொழில் நடந்தமைக்கான சான்றாக ஆறு உலைக்களங்கள், உறை கிணறு, வீட்டின் ஒரு பகுதி ஆகியவை கண்டறியப்பட்டன.
தமிழகத்தில் அகழய்வு நடந்த அரிக்கன்மேடு, பூம்புகார், உறையூர், அழகன்குளம் போன்ற இடங்களில் கட்டடங்கள் பெரிய அளவில் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் நகர்ப்புற நாகரிகத்தின் தடயம் முதன்முதலாகக் கீழடியில் கண்டறியப்பட்டது. இதை ஆய்ந்தறிந்த அமர்நாத் இராமகிருட்டிணன் அவர்களைப் பாராட்டுவதற்குப் பதில் உடனடியாக அவரை தொலைதூரத்தில் உள்ள அசாம் மாநிலத்திற்கு இந்திய அரசு மாறுதல் செய்துவிட்டது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தவுடன் நடுவண் அரசு மூன்றாம் கட்ட ஆய்வு என்ற பெயரில் ஒரு ஆய்வை நடத்தி புதிதாக எதுவும் கிடைக்கவில்லை என்று கூறி அதை முடிக்குமாறு ஆணையிட்டது. தமிழ்நாட்டு மக்கள் கொதித்தெழுந்தவுடன் தமிழக தொல்லியல் துறை  அமைச்சர் பாண்டியராசன், துறையின் செயலாளர் உதயச் சந்திரன் ஆகியோர் 4ஆம், 5ஆம் கட்ட ஆய்வுகளை தமிழகத் தொல்லியல் துறையின் சார்பில் நடத்த முன்வந்து ஆணை பிறப்பித்தது பாராட்டத்தக்கது. இதன் விளைவாகப் புதிய வரலாற்றுச் செய்திகள் நமக்குக் கிடைத்தன.   
கீழடியில் 2018இல் நடைபெற்ற 5ஆம், 6ஆம் கட்ட அகழாய்வின் போது சேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள பீட்டா பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தன. இவற்றின் காலம் கி.மு. 580 என்று அங்கு கணித்து கூறியுள்ளனர். அதாவது, கீழடியின் நாகரிகம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. முதல் நூற்றாண்டு வரையிலான செறிந்த நாகரிகம் கொண்ட பகுதியாக விளங்கியிருக்க வேண்டும் என்பது இதன்மூலம் நிறுவப்பட்டுள்ளது.
வைகைக் கரையில் நகர நாகரிகம், தமிழ் பிராமி எனப்படும் தமிழி எழுத்து ஆகியவை கி.மு. 6ஆம் நூற்றாண்டு அளவிலானவை என்பது உள்ளங்கை நெல்லிக் கனி போல தெளிவாகத் தெரிகிறது.  அதாவது, கி.மு. 6ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவுப் பெற்ற சமுதாயமாகத் திகழ்ந்துள்ளனர் என்பது இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழின் தொன்மை குறித்து அறிஞர்  சிலர் கூறிய கருதுகோள்கள் உண்மையானவை என்பதற்கு கீழடி ஆய்வு சான்றாக அமைந்துள்ளது என தொல்லியல் அறிஞரான கா. இராசன்  கூறியுள்ளார்.
 கீழடி தமிழி எழுத்துக்கள் அல்லது கிறுக்கல்கள் கொண்ட பானை ஓடுகள் ஏராளமாகக் கிடைத்திருக்கின்றன. அதன் முதன்மைத் தன்மை குறித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி. பாலசுப்பிரமணியம் அவர்கள் கூறியுள்ளதை இங்கு சுட்டிக்காட்டுவது சாலவும் பொருத்தமானதாகும்.
"மனித நாகரிகத்தின் சிறந்த கண்டுபிடிப்புகளில் பானையும், அதை வனையும் சக்கரமும் சிறந்ததாகும். அகழ்வாராய்ச்சியின் அகரம் போன்றது பானை ஓடுகளாகும். பானை ஓடுகளின் மூலம் கடந்த காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு ஆகியவை குறித்து ஆய்வாளர்கள் ஆராய்கிறார்கள்” என                            தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 24-09-2019 அன்று நடைபெற்ற பானை அகழ்வாராய்ச்சிக்கான அனைத்து நாட்டு கருத்தரங்கில் பேசும்போது அவர் குறிப்பிட்டுள்ளதை இங்கு பொருத்திப் பார்க்கவேண்டும்.
தமிழி எழுத்துக்களின் முந்தைய வரிவடிவமாக விளங்கிய குறியீடுகள் பெருங்கற்காலம் மற்றும் இரும்புகால மக்களின் எண்ணத்தை எடுத்துக் காட்டும் எழுத்து வடிவமாகும். கீழடியில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட இத்தகைய கீறல் பொறித்த பானை ஓடுகள் இரும்பு காலத்திலிருந்து இப்பகுதியில் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை உணர்த்துகிறது.
்சிந்துவெளி முத்திரைகளுக்கும் தமிழி எழுத்துக்களுக்கும் இடையிலான இணைப்புச் சங்கிலியாக கீழடி பானைக் கீறல்களை நாம் பார்க்க முடியும். இந்தப் பானைக் கீறல்களில் சிந்துவெளியில் கிடைத்த கீறல்களைப் போன்ற கீறல்களும் கிடைத்திருக்கின்றன. ஆகவே, அதன் தொடர்ச்சியாகவும் இதைப் பார்க்கவேண்டும். மேலும், இம்மாதிரி கீறல்களைக் கொண்ட பானை ஓடுகள் இந்தியாவின் பிற பகுதிகளிலும், தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் கிடைத்துள்ளன. அவற்றில் 75% தமிழ்நாட்டில்தான் கிடைத்துள்ளது. கீழடியில் மட்டுமல்ல, கொற்கை, அழகன்குளம் ஆகியவற்றிலும் இதுபோன்ற பானை ஓடுகள் கீறல்களுடன் கிடைத்திருக்கின்றன. கீழடியில் தமிழி பொறிப்புகள் கிடைத்தப் படிநிலைக்குக் கீழே இவை கிடைத்துள்ளன. ஆகவே, அவை தமிழி எழுத்துக்கு முந்திய காலமாக இருக்கலாம்” என சிந்துவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.  
கீழடியில் கிடைத்த 70 எலும்புத் துண்டுகள் புனாவில் உள்ள டெக்காண் ஆய்வகத்தில்  பகுப்பாய்வு செய்யப்பெற்று திமில் உள்ள காளை, எருமை, வெள்ளாடு, கலை மான், காட்டுப் பன்றி மற்றும் மயில் ஆகிய உயிரினங்களின் எலும்புகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்பகுப்பாய்வு முடிவுகள் மூலம் சங்க கால சமூகம் வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்ததோடு கால்நடை வளர்ப்பையும்  மேற்கொண்டிருந்தது என்பது தெரியவருகிறது.
இதில் மிக முதன்மையானது என்னவென்றால் கீழடி அகழாய்வில் குதிரையின் எலும்புகள் கிடைக்கவில்லை என்பதாகும். சிந்து சமவெளி அகழாய்விலும், குதிரையின் எலும்புகள் கிடைக்கவில்லை என்பது இங்கு ஒப்பிடத்தக்கது. முழுமையாக இது தமிழர்களின் நாகரிகமே என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கீழடியில் மக்கள் பயன்படுத்திய அணிகலன்கள் மற்றும் பொருட்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. கீழடிக் கால நாகரிகத்தை இவை எடுத்துக்காட்டுகின்றன.  எல்லாவற்றையுவிட மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன.  மீன் சின்னம் பாண்டியர்களின் சின்னம் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே கீழடி சங்க கால மதுரையாகவோ அல்லது மதுரையின் புறப்பகுதியில் அமைந்த ஊராகவோ இருக்கக் கூடும்.
இங்கே கிடைத்திருக்கிற ரோமானிய மண் பாண்டங்கள், சாதவாகன காலத்துப் பானை ஓடுகள் ஆகியவை ரோமானியர்களுடன் சாதவாகனர்களுடனும் தமிழர்களுக்கிருந்த வாணிபத் தொடர்பை எடுத்துக் காட்டுகின்றன. சங்க இலக்கியங்களிலும் இச்செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் பண்டைய நகரங்களில் பலவகையான வடிகால் முறை இருந்ததற்கான ஆதாரம் முதல்முறையாகக் கீழடியில் கிடைத்தது.  இங்கு மூன்று வகையான கால்வாய் முறைகள் இருந்தன. திறந்த கால்வாய், மூடிய கால்வாய், சுட்ட மண்ணினால் செய்யப்பட்ட குழாய் கால்வாய் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  
வீடுகளிலிருந்து கழிவு நீர் செல்லும் சுருங்கை வெளியே தெரியாதபடி மேற்புறம் மூடி மறைக்கப்பட்டிருந்தது. இந்தச் சுருங்கை நீர் தெருவில் உள்ள பெரிய சுருங்கைகளில் கலந்து அவை இறுதியாக மதில் புறத்திலிருந்த  அகழியில் போய் விழுந்தது. அகழியில் கழிவு நீர் விழும் குழாய்  யானையின் தும்பிக்கை போல் இருந்தது என பரிபாடல் கூறுகிறது.
கீழடியில் அகழாய்வு செய்யப்பட்ட தொல்லியல் மேட்டின் முழுப் பரப்பளவு 110 ஏக்கராகும். இதில் இரண்டு ஏக்கர் நிலத்தை தோண்டியதிலேயே  இத்தனை ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இங்கு அமைந்திருந்த நகரம் ஒரே காலத்தில் உருவானது அல்ல.  மூன்று கட்டங்களாக இது வளர்ந்து உயரிய நிலையை அடைந்திருக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் இந்நகரம் அழிந்திருக்கிறது.
தலையானங் காலத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் போற்றும் வகையில் புலவர் மாங்குடி மருதனார், மதுரைக் காஞ்சி என்னும் நூலை எழுதினார். இந்த நூல் மதுரை நகரின் பல்வேறு மாண்புகளை, மக்களின் வாழ்க்கை முறைகள், நகரின் அமைப்பு, சிறப்பு ஆகியவற்றை விரிவாகக் கூறுகிறது. கீழடி அமைந்துள்ள 110 ஏக்கர் அளவிலும் அமர்நாத் இராமகிருட்டிணன் சுட்டிக்காட்டியபடி வைகை ஆற்றின் இருபுறங்களிலும் அமைந்துள்ள 293 இடங்களிலும் முழுமையான அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம். அகழாய்வுகள் நடத்தப்பட்டு அதன்மூலம் கிடைக்கும் தடயங்கள் மதுரைக் காஞ்சியில் கூறப்பட்டுள்ள செய்திகளுக்கு தொல்லாய்வுச் சான்றாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.
சங்க இலக்கியங்களிலும், அதற்குப் பின்னர் எழுந்த சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களிலும், சேர, சோழ, பாண்டியர்களின் தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்கள் ஆகியவைப் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. ஆனால் இக்குறிப்புகளை உறுதி செய்வதற்குரிய தொல்லியலாராய்ச்சித் தடயங்கள் தமிழகத்தில் கிடைக்கவில்லை.  எனவே, நமது இலக்கியங்களில் கூறப்பட்டவை வெறும் கற்பனையே என உலகம் கருதும் நிலை இதுவரை இருந்தது. ஆனால், இத்தகைய கூற்றினை பொய்யாக்கும் வகையில் கீழடியில் நகர்ப்புற நாகரிகம் கி.மு. 6ஆம் நூற்றாண்டிலேயே நிலவியது என்பதை அங்கு நடந்த  அகழாய்வு உறுதி செய்துள்ள நிகழ்ச்சி தமிழக வரலாற்றில் மட்டுமல்ல,  இந்திய வரலாற்றில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2ஆம்  நூற்றாண்டு வரையிலானது என முடிவு செய்யப்பட்டிருந்தது. சங்க இலக்கியங்கள், சங்கம் மருவிய இலக்கியங்கள், கீழ்க்கணக்கு நூல்கள் ஆகிய இலக்கியங்களின் வரலாற்றினை முற்றிலுமாக மாற்றி எழுதவேண்டிய தேவையை கீழடி ஆய்வு முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன. இவை மட்டுமல்ல, தமிழக வரலாறும் மாற்றம் பெறவேண்டிய இன்றியமையாமை உருவாகியுள்ளது.