இந்தித் திணிப்பு – காமராசர் கண்ட தீர்வு! பழ. நெடுமாறன் அச்சிடுக
ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2022 12:37

1963ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்திய ஆட்சிமொழிச் சட்டத்தின் கீழ் 1976ஆம் ஆண்டில் ஆட்சிமொழிக்கான நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டது.

இககுழுவில் மக்களவை உறுப்பினர்கள் 20 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேரும் நியமிக்கப்பட்டு ஆட்சிமொழி நடவடிக்கைகளில் இந்தியை பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து, குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்யவேண்டும். ஐந்தாண்டுகளுக்கொரு முறை ஆட்சிமொழிக்கான நாடாளுமன்றக் குழு திருத்தியமைக்கப்படும். அதன்படி 2019ஆம் ஆண்டில் உள்துறை அமைச்சர் அமித்சா தலைமையில் ஆட்சிமொழிக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு குடியரசுத் தலைவரிடம் அளித்த அறிக்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் முதன்மையான பரிந்துரைகள் கீழ்வருமாறு:

1. நாட்டில் உள்ள இந்தி பேசும் மாநிலங்களில் அமைந்திருக்கும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிலையங்கள் (ஐ.ஐ.டி.), அகில இந்திய மருத்துவக் கல்விக்கான நிலையங்கள் (எய்ம்ஸ்), ஒன்றிய அரசின் தொழில்நுட்பக் கல்விக்கான நிலையங்கள், நவோதய வித்யாலயா கல்வி நிறுவனங்கள், ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்கள், கேந்திரியா வித்யாலயா கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பயிற்றுமொழியாக இந்தி இருக்கவேண்டும்.

2.இந்தியாவின் ஆட்சிமொழியாக இந்தி விளங்க வேண்டுமென்றால், பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிலையங்கள், தொழில்நுட்பக் கல்வி மற்றும் மருத்துவ கல்வி நிலையங்களில் இந்தி பயிற்றுமொழியாக ஆக்கப்படவேண்டும். இல்லையேல் இந்தியாவின் பொது மொழியாக இந்தி விளங்க முடியாது.

3.பீகார், சத்தீசுகர், உத்தரகாண்ட், சார்கண்ட், அரியானா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இராசசுத்தான், உத்திரப் பிரதேசம், தில்லி மாநிலம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றில் நூற்றுக்கு நூறு சதவீதம் இந்தி மொழியின் பயன்பாடு இருக்க வேண்டும்.

4. இந்திய அரசின் பணிகளுக்கான தேர்வுகளில் கட்டாய ஆங்கில மொழி வினாத்தாள் இருப்பதைக் கைவிட வேண்டும்.

5.இந்தி பேசும் மாநிலங்களில் பணியாற்றும் ஒன்றிய அரசின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் இந்தியைப் பயன்படுத்தாவிட்டால், அவர்களுக்கு எச்சரிக்கைவிட வேண்டும். அதற்குப் பிறகும் அவர்கள் இந்தியைப் புறக்கணித்தால் அது குறித்து அவர்களின் ஆண்டு செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையில் குறிக்கவேண்டும்.

6.ஒன்றிய அரசு அலுவலகங்கள், அமைச்சர்களின் துறைகள் ஆகியவற்றின் கடிதங்கள், மின்னஞ்சல்கள் போன்றவை இந்தியில் இருக்கவேண்டும்.

7.இந்திய அரசின் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்கள், அங்கு ஆற்றப்படும் உரைகள் இந்திமொழியில் மட்டுமே இருக்கவேண்டும்.

8.உலக நாடுகளில் இருக்கக்கூடிய இந்திய தூதுவர் அலுவலகங்களில் இந்தி மொழியின் பயன்பாடு குறித்து முறையான அறிக்கைகள் அரசுக்கு அனுப்பப்படவேண்டும்.

9.இந்தி பேசும் மாநிலங்களில் உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகளை அவசியமானால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தரவேண்டும்.

10.ஐ.நா. பேரவையின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தி ஆக்கப்படவேண்டும்.

அமித்சா குழு வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கை, இந்தி பேசாத மாநிலங்களில் குறிப்பாக, தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. அதன் விளைவாக இன்னொரு மொழிப் போர் உருவாகும் நிலை ஏற்பட்டிருப்பதைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் மற்றும் பல தலைவர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

1950ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்டது. அச்சட்டத்தில் குறிப்பிட்டிருந்தபடி 15 ஆண்டுகள் கழித்து 1965ஆம் ஆண்டில் இந்தியாவின் ஆட்சிமொழியாக இந்தியை ஆக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படவேண்டும் என்பதற்கிணங்க, அப்போதைய இந்திய அரசு வெளியிட்ட ஆணையின் விளைவாக தமிழ்நாட்டில் இந்திக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் வெடித்தது. அதே நிலை இப்போது அமித்சா குழு விடுத்த அறிக்கையின் விளைவாக ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசியல் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் தமிழ் உள்பட 22 மொழிகள் இந்தியாவின் தேசிய மொழிகளாகவும், சம உரிமை கொண்டவைகளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 22 மொழிகளில் ஒன்றான இந்தி மொழியை ஆட்சிமொழியாக்க முயல்வது பிறமொழிகளைப் புறக்கணித்து ஒதுக்கும் முயற்சியாகும்.

இந்தியின் ஆதரவாளர்கள் குறிப்பிடுவதைப் போல இந்தி பெரும்பான்மையினர் பேசும் மொழி அல்லவே அல்ல. பீகாரி, மைதிலி, போஜ்புரி, அரியான்வி, இராசசுத்தானி, மார்வாரி போன்ற பல்வேறு வட்டார மொழிகளையும் இந்தியின் கணக்கில் சேர்த்துக்கொண்டு இந்தியாவில் இந்தி பேசுவோரின் எண்ணிக்கை கூட்டிக் காட்டப்படுகிறது.

தமிழ் உள்பட பல மொழிகள் மிகத் தொன்மை வாய்ந்தவை; இலக்கிய வளம் நிறைந்தவை. இம்மொழிகளைப் புறக்கணித்துவிட்டு மிகப் பிற்காலத்தில் தோன்றிய இந்திமொழியை ஆட்சிமொழியாக்க முனைவது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்குப் பெரும் கேட்டினை விளைவிப்பதாகும்.

இந்தி வெறியர்களின் நோக்கம் இந்தியை ஆதிக்க மொழியாக்குவது அல்ல. சமற்கிருதத்தையே ஆட்சிமொழியாக்குவதற்கான திட்டத்தின் முதல் கட்டம்தான் இந்தித் திணிப்பாகும். இதை மூடி மறைக்க முயலுகிறார்கள்.

1965ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வரலாறு கண்டறியாத வகையில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்து எழுந்தபோது மாணவர்களின் மன உணர்வுகளை புரிந்துகொண்ட பெருந்தலைவர் காமராசர் அவர்கள், அப்போது அகில இந்திய காங்கிரசுத் தலைவராக வீற்றிருந்தார். தலைமையமைச்சராக இருந்த நேருவின் மறைவிற்குப் பின்னர் முதலில் லால்பகதூரையும், அதற்குப் பின்னர் இந்திராகாந்தியையும் நாட்டின் தலைமையமைச்சராகப் பதவியேற்க வைத்த அவரது திறமையை உலகமே பாராட்டியது. அத்தகைய பெருமைக்குரிய பெருந்தலைவர் காமராசர் அவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினால் ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் அதை கையாள்வதற்கு உரிய வழிமுறைகளையும், இந்திய அரசியல் சட்டம் ஏற்றுக்கொண்ட 22 மொழிகளின் மதிப்பினை நிலைநிறுத்தும் வகையிலும், எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்பதைக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வரலாறு இன்றைய இளைஞர்களுக்குத் தெளிவை ஊட்டும் என நம்புகிறேன்.

1965ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இந்திக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் எரிமலை பொங்கி வெடித்தது போல் அமைந்தது. இதன் எதிரொலி இந்தியா முழுவதும் பரவியது. இந்திய அரசு இதைக் கண்டு அச்சமடைந்தது. ஆளுங் கட்சியான காங்கிரசுக் கட்சியிலும் கடும் கருத்து வேறுபாடுகள் மூண்டெழுந்தன.

அகில இந்தியக் காங்கிரசுத் தலைவர் காமராசர் அவர்களைக் குத்தூசி குருசாமி அவர்களின் தலைமையில் மோகன் குமாரமங்கலம், பேராசிரியர் மு. வரதராசனார், சோ. இலட்சுமிரதன் பாரதி, செங்கல்வராயன், திருமதி. அனந்தநாயகி, திருமதி. இலட்சுமி பாரதி ஆகியோர் அடங்கிய தூதுக்குழு சந்தித்துப் பேசியது.

இந்திக்கு எதிரான தமிழக மாணவர்களின் போராட்டத்தின் நியாயத்தையும் அதன் விளைவாக தமிழக மக்களின் கொந்தளிப்பையும் குறித்து இத்தூதுக்குழுவினர் காமராசரிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.

“காங்கிரசு செயற்குழுவில் இப்பிரச்சினைக் குறித்து முடிவெடுத்து அனைத்து மாநிலங்களின் இசைவைப் பெறும் வரை ஆங்கிலமும் ஆட்சிமொழியாகத் தொடர்ந்து இருப்பதற்குச் சட்டப்பூர்வமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதாகவும், மாநிலத்தில் தமிழ் ஆட்சிமொழியாகவும் இதர துறைகளிலும் உரிய இடத்தைப் பெறுவதற்கு ஆவன செய்வதாகவும்” அத்தூதுக்குழுவினரிடம் காமராசர் உறுதி கூறினார்.

1965ஆம் ஆண்டு சனவரி 31ஆம் நாள் அன்று பெங்களூரில் காங்கிரசுத் தலைவர் காமராசர் தலைமையில் கருநாடக முதலமைச்சர் எஸ். நிஜலிங்கப்பா, வங்காள காங்கிரசுத் தலைவர் அதுல்யா கோஷ், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஒன்றிய அமைச்சர் சஞ்சீவி ரெட்டி ஆகியோர் கூடிப் பேசி வெளியிட்ட அறிக்கையில் “இந்தி பேசாத மக்கள் மீது இந்தியைத் திணிக்க இந்தி ஆதரவாளர்கள் முயற்சி செய்வது நாட்டின் ஒற்றுமைக்கே உலை வைத்துவிடும்” என எச்சரித்தனர்.

உடனடியாக ஒன்றிய மூத்த அமைச்சர்களில் ஒருவரான மொரார்ஜி தேசாய் விடுத்த எதிர் அறிக்கையில் “தமிழ்நாட்டில் உள்ள காங்கிரசுத் தலைவர்கள் இந்தியை எதிர்க்காமல் இருக்கும்படி மக்களை ஒப்புக்கொள்ள வைக்கவேண்டும். 1950ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த உடனேயே இந்தி இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்கப்பட்டிருக்க வேண்டும்” என இந்திக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார். தலைமையமைச்சர் கனவில் இருந்த மொரார்ஜி தேசாய் இந்தி பேசும் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக இவ்வாறு அறிக்கை வெளியிட்டார்.

அத்துடன் அவர் நிற்கவில்லை. இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த 106 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட விண்ணப்பம் ஒன்றினைக் காங்கிரசுத் தலைவர் காமராசரிடம் அளிக்க ஏற்பாடு செய்தார். “ஆட்சிமொழிச் சட்டத்தில் எத்தகைய திருத்தத்தையும் கொண்டு வருவதற்கு முயற்சி செய்ய வேண்டாம்” என அவ்விண்ணப்பத்தில் வலியுறுத்தப்பட்டது.

தலைமையமைச்சர் லால்பகதூர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். அவர் உள்ளூர மொரார்ஜி தேசாய் போன்ற இந்தி ஆதரவாளர்களின் பக்கமே இருந்தாலும், இந்திக்கு எதிரான எதிர்ப்புக் குரலைப் புறக்கணிக்க அவரால் முடியவில்லை. இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர்களான சி. சுப்பிரமணியம், ஓ.வி. அளகேசன் ஆகியோர் பதவி விலகுவதாக அறிவித்தனர். ஆனால் அவ்வாறு அவர்கள் பதவி விலகியிருக்கக் கூடாது என்று காமராசர் கருதினார். பதவி விலகி விட்டு தமிழகத்திற்குத் திரும்பி வந்த அவர்கள் இருவரும் தலைவரைச் சந்தித்தபோது அவர்கள் செய்தது சரியில்லை என்று கூறிக் கடிந்துகொண்டார். அவர்கள் இருவரும் உடனடியாக தங்களின் பதவி விலகல் கடிதங்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்கள்.

இந்தியை எதிர்த்துத் தமிழக மாணவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டபோது பதைப்புணர்ச்சியுடன் இந்திராகாந்தி தமிழகத்துக்கு ஓடோடி வந்தார். அவரது பொறுப்பிலிருந்த அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையே தமிழகத்தில் ஏற்பட்ட கிளர்ச்சிகளுக்கு உடனடிக் காரணமாக அமைந்தது என்று கேள்விப்பட்டபோது அவர் மிகவும் வருத்தப்பட்டார். ஆகவே, தமிழகத்துக்கு வந்து நிலைமையினை விளக்கிச் சொல்லி கிளர்ச்சி செய்யும் மாணவர்களை அமைதிப்படுத்துவது தன்னுடைய கடமை என்று அவர் கருதினார். இந்திய ஒருமைப்பாட்டை வலுப்படுத்த இந்தி பொது மொழியாக இருக்க வேண்டுமே தவிர, பொது மொழியாக அது இருப்பதால் இந்திய ஒருமைப்பாடு சீர்குலையுமென்றால் மொழிப் பிரச்சனையை மறுபரிசீலனை செய்வது அவசியம் என்று அவர் கருத்துத் தெரிவித்தார். கோவை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய இந்திராகாந்தி, “நாடாளுமன்றத்தில் தமிழ்தான் இணைப்பு மொழியாக இருக்கவேண்டும் என்றால் நான் உள்ளபடியே மிகவும் மகிழ்ச்சியடைவேன்” என்றார். காமராசரும் சரி, இந்திராகாந்தியும் சரி மொழிப் பிரச்சனையில் தலைமையமைச்சராக இருந்த லால்பகதூர் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்கள் என்பது உண்மை.

தலைமையமைச்சர் லால்பகதூர் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துப் பேசியதில் தமிழ்நாட்டில் நடைபெற்ற துயரகரமான நிகழ்ச்சிகளைக் கண்டு தான் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்திருப்பதாகவும், நேருவின் வாக்குறுதி பற்றிய தவறான கருத்துகளைப் போக்க விரும்புவதாகவும் நேருவின் வாக்குறுதியின்படி மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் ஆட்சிமொழியாகத் தொடர்ந்து இருக்கும் என்று கூறிவிட்டு கீழ்க்காணும் ஐந்து வாக்குறுதிகளை அளித்தார்.

1. ஓவ்வொரு மாநிலமும் தனது மாநில மொழியிலோ அல்லது ஆங்கிலத்திலோ ஆட்சி நிர்வாகத்தை நடத்திக்கொள்ள முழுமையாக உரிமை உண்டு.

2. ஒரு மாநில அரசு மற்றொரு அரசுடன் தொடர்புகொள்ள ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம். அல்லது வேறு மொழியைப் பயன்படுத்தினால் அதற்குரிய ஆங்கில மொழிபெயர்ப்பையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

3. இந்தி பேசாத மாநிலங்கள் ஒன்றிய அரசுடன் தொடர்புகொள்ளும்போது ஆங்கிலத்தைப் பயன்படுத்த முழு உரிமை உண்டு. இந்தி பேசாத மாநிலங்களின் ஒப்புதலின்றி இந்த ஏற்பாடு மாற்றப்பட மாட்டாது.

4. ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக ஆங்கிலமும் தொடர்ந்து பயன்படுத்தப்படும்.

5. இந்திய அரசுப் பதவிகளுக்கான தேர்வுகள் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்பதற்குப் பதில் ஆங்கிலத்திலும் நடத்தப்படும்.

தலைமையமைச்சரின் இந்தப் பேச்சு இந்தி எதிர்ப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டினாலும் காலங்கடந்து அவர் அளித்த இந்த வாக்குறுதிகள் பயனளிக்கவில்லை தமிழ்நாட்டில் காங்கிரசு கட்சியின் மதிப்பை வெகுவாகக் குறைத்துவிட்டது.

இந்த நிலைமையில் மாணவர்களின் நியாயமான உணர்வுகளைப் புரிந்துகொண்ட தலைவர் காமராசர், அவர்களின் அச்சத்தைப் போக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அகில இந்தியக் காங்கிரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் மொழிப் பிரச்சனை குறித்து மனம் திறந்த விவாதத்திற்கு ஏற்பாடு செய்தார். 1965ஆம் ஆண்டில் சூன் மாதத்தில் புதுதில்லியில் கூடிய காங்கிரசுச் செயற்குழு மொழிப் பிரச்சினை குறித்து இரண்டு நாட்கள் விவாதித்தது. மொழிப் பிரச்சினைக்காகச் சிறப்பாக இச்செயற்குழு கூட்டப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க-தாகும். இக்கூட்டத்தில் காங்கிரசு மாநில முதலமைச்சர்கள் அனைவரும் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். தீவிரமான வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு தலைவர் காமராசர் கூறிய யோசனையைச் செயற்குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. மொழிப் பிரச்சினையால் நாடு பிளவுபட்டுப் போகாதபடி சிறந்ததொரு தீர்வினைச் செயற்குழு வகுத்தது.

ஆங்கிலத்திற்கும் இந்திக்கும் இடையே தான் போட்டியுள்ளது. ஆங்கிலத்தின் இடத்திலிருந்து அதை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்தியை அமர வைக்க சிலர் விரும்புகிறார்கள். இதன் விளைவாக மாநில மொழிகள் பின்னோக்கித் தள்ளப்படும் என்ற அச்சத்தின் காரணமாகத்தான் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மூண்டது என்பதை உணர்ந்த தலைவர் காமராசர் “ஆங்கிலம் அகற்றப்படும் இடங்களில் எல்லாம் மாநில மொழிகள் விரைவில் அமர்த்தப்பட-வேண்டும். மாநிலங்களில் அந்தந்த மொழிகளே ஆட்சிமொழிகள் ஆவதை விரைவுபடுத்த வேண்டும். இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி ஆட்சிமொழியாக ஆக்கப்பட்டு அது வளமாக்கப்பட-வேண்டும். அதற்குப் பிறகே இணைப்பு மொழியாக அதைப் பயன்படுத்துவதைக் குறித்து ஆராயவேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய மொழிகளும் வளம்பெறச் செய்யும் திட்டம் ஒன்றினை ஒன்றிய அரசு வகுத்துச் செயல்படுத்த வேண்டும். ஒன்றிய அரசு தேர்வுகளை அவரவர்கள் தாய்மொழியில் எழுதுவதற்கு ஏற்ப அனைத்துத் தேசிய மொழிகளையும் ஒன்றிய அரசு தேர்வு மொழிகளாக ஆக்கவேண்டும்” என தலைவர் காமராசர் கூறிய யோசனைகளைச் செயற்குழுவினர் ஏற்றுக்கொண்டு இந்த அடிப்படையில் ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றினர். மத்திய அரசுத் தேர்வுகளை இந்தியில் நடத்தினால் இந்தி பேசும் பகுதி மாணவர்களே பெரிதும் பயனடைவார்கள். இந்தி பேசாத பகுதி மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்ற அச்சம் இத்தீர்மானத்தின் மூலம் நீக்கப்பட்டது. இந்திக்குச் சமமான தகுதி பிற மாநில மொழிகளுக்கும் கிடைக்க இத்தீர்மானம் வழி வகுத்தது.

இந்தியின் தீவிர ஆதரவாளர்களான தலைமையமைச்சர் லால்பகதூர், உள்துறை அமைச்சர் நந்தா உள்பட அனைவரும் இத்தீர்மானத்தை ஏற்றுக்கொண்டனர். இந்தி ஆதரவாளர்களும் இந்தி எதிர்ப்பாளர்களும் ஒப்புக்கொள்ளக்கூடிய வகையில் மொழிப் பிரச்சினைக்குக் காமராசர் தீர்வு கண்ட விதத்தை அனைவருமே பாராட்டினார்கள். பதினைந்து தேசிய மொழிகளிலும் தேர்வு எழுதும் திட்டத்திற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த மொரார்ஜி தேசாய், டாக்டர் இராம் சுபாக்சிங் போன்றவர்கள் கூட காமராசரின் விளக்கத்திற்குப் பிறகு இதை ஏற்றுக் கொண்டனர். காங்கிரசுத் தலைவர் காமராசர் கூறிய யோசனைகளை ஏற்று அதற்கிணங்க செயற்குழு நிறைவேற்றிய இந்தத் தீர்மானத்தை அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஏழை எளிய மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றார்கள். ஆனால் ஆங்கிலம் கற்ற வர்க்கத்தினரும் அதிகாரிகளும் இதைக்கண்டு எரிச்சல் அடைந்தார்கள். தலைமுறை தலைமுறையாக ஆங்கிலத்தைப் பயின்று அதன் பயனாக அரசுப் பதவிகளை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள கூட்டத்தினர் சொல்லொணாத ஆத்திரம் அடைந்தனர். எல்லா மாநில மொழிகளிலும் அரசுத் தேர்வுகள் எழுதுவதற்கு அனுமதிப்பதன் மூலம் ஆங்கிலம் அகற்றப்பட்டு தங்களின் ஏகபோக ஆதிக்கம் தகர்க்கப்படும் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டது. இதன் காரணமாகத்தான் அவர்கள் காமராசரின் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.  

இதையொட்டி தமிழகம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு பொதுக் கூட்டங்களில் பெருந் தலைவர் காமராசர் உரையாற்றும்போது பின்கண்ட கருத்துகளை வலியுறுத்தினார்.

“தலைமுறை தலைமுறையாக ஆங்கிலம் பயின்று வருகிறவர்கள் நிருவாகத் துறையில் தங்களுக்கு இருந்துவரும் ஏகபோகத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், நிருவாகத்தில் பாமர மக்கள் பங்குபெறுவதைத் தடுப்பதற்காகவும்தான் ஆங்கிலம் நீடிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.

பரம்பரைப் பரம்பரையாகப் பணக்காரர்களாக இருந்தவர்களும், பதவி அனுபவிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தவர்களும்தான் ஆங்கிலமே நீடிக்க வேண்டும் என்று ஒரு போராட்டமே நடத்தினார்கள். இந்தி எதிர்ப்பு என்ற பெயரால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது சோசலிசத்தை எதிர்க்கிறவர்கள் கண்டுபிடித்த ஒரு வழியாகும்.

ஐ.ஏ.எஸ். தேர்வை இந்தியில் எழுதினால் இந்தித் தாய்மொழிக்காரனுக்குத்தான் சலுகை உண்டாகிவிடும் என்று சொல்லுகிறார்கள். தில்லி செயலகத்தில் செயலாளராக இருப்பவன் இந்தி வந்தால் தனக்குக் கஷ்டமாச்சே என்று நினைக்கிறான். அத்தோடு கல்லூரியில் படிக்கிற அவன் பிள்ளைக்கும், ஆங்கிலவழிப் பள்ளியில் படிக்கிற அவன் பேரனுக்கும் இந்தி வந்தால் வேலை கிடைக்காதே என்று நினைத்துக் கொள்கிறான்.

அதற்காகத்தான் நான் கேட்கிறேன், என் தாய்மொழி தமிழ்; ஐ.ஏ.எஸ் தேர்வை என் மொழியிலும் நடத்து என்று கேட்கிறேன். அதுமட்டுமல்ல் நமது மாநில அரசு நடத்துகிற தேர்வு எல்லாமே தமிழில் நடத்தனும் என்கிறேன். நான் முதல் மந்திரியாய் இருந்தபோது தமிழை ஆட்சிமொழி ஆக்கினோம். ஆனால் அரசு தலைமைச் செயலகத்தில் இருக்கிறவங்க தமிழை அங்கே நுழைய விடுகிறார்களா? தில்லியிலே இருக்கிற மாதிரியே இங்கேயும் ஆங்கிலம் படித்தவர்கள் தமிழை நுழைய விடமாட்டேன் என்கிறார்கள். நான் என் தாய்மொழியிலே இந்தப் தேர்வையெல்லாம் நடக்கணும் என்கிறேன் இது தப்பா?

இதைச் சொல்லும்போதுதான் பரம்பரையாய் பண ஆதிக்கம் படைத்தவர்களும் உத்தியோக ஆதிக்கம் படைத்தவர்களும், இருந்த ஆதிக்கம் பறி போகுதே என்று எதிர்ப்புக் கூச்சல் போடுகிறார்கள்.’’