தரமற்ற கல்வியால் தாழ்ந்த தமிழகம்! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 செப்டம்பர் 2017 12:23

தமிழ்நாட்டில் 552 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்தும் அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியலுக்காக 4 துறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 7 கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளாகும். 20 கல்லூரிகள் தன்னாட்சிக் கல்லூரிகளாகும். எஞ்சிய 495 கல்லூரிகள் சுயநிதிக் கல்லூரிகளாகும். பாலிடெக்னிக் கல்லூரிகள் 419, கட்டட வடிவமைப்புக் கல்லூரிகள் 21 உள்ளன.

 

மேலே கண்ட அனைத்துக் கல்லூரிகளிலிருந்து ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படித்துப் பட்டம் பெறுகின்றனர். ஆனால், இவர்கள் பெறும் கல்வியின் தரம் எவ்வாறு அமைந்துள்ளது என்ற கேள்விக்கு விடையளிப்பது போல உச்சநீதிமன்றத்தில் அண்மையில் ஒரு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சுயநிதி பொறியியல் ஒன்றில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிய ஒருவர் கல்லூரி நிர்வாகத்தினால் தான் மிரட்டப்படுவதாகவும், பல்வேறு வகையில் அவமதிக்கப்பட்டுத் துன்புறுத்தப்படுவதாகவும் உச்சநீதிமன்றத்தில் புகார் ஒன்றினை அளித்தார்.

1994ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேகர், நீதியரசர் டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டவற்றை மேற்கண்ட பேராசிரியர் தனது மனுவில் "மாணவர்களிடம் உள்ள திறமையையும் அறிவாற்றலையும் கண்டறிந்து வெளிக்கொணர ஆசிரியரால் மட்டுமே இயலும். பண்பாட்டுத் தளத்தில் மாணவனிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சக்தியாக ஆசிரியர் திகழுகிறார்'' என்று எடுத்துக்காட்டினார்.

அகில இந்திய தொழில் கல்விக்கான கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நாடெங்கிலும் உள்ள சுயநிதிக்கல்லூரிகளில் பணியாற்றும் 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பல வகையிலும் பெரும் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளார்கள் என்பதையும் தனது மனுவில் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் தனது மனுவில் தொழில் கல்வி முறையில் கையாளப்படும் தவறான நடவடிக்கைகளின் மூலம் நாட்டின் வளர்ச்சி பெருமளவிற்குப் பாதிக்கப்படும். தனியார் கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்ற மாணவர்கள் வேலையில்லாமல் திண்டாடுவதற்கு அவர்களின் ஆசிரியர்களே பொறுப்பாவார்கள். ஏனென்றால் எத்தகைய இலட்சிய நோக்கமும் இல்லாமல் ஆசிரியர்கள் செயல்படுகிறார்கள். அதற்கு கல்லூரி நிர்வாகத்தின் கைப்பிடியில் அவர்கள் சிக்கித் திணறுவதுதான் காரணமாகும்.

தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்களை வேலைக்குச் சேர்க்கும்போதே அவர்களுடைய பட்டச் சான்றிதழ்களை நிருவாகம் வாங்கி வைத்துக்கொள்கிறது. அவர்களுடைய ஊதியத்தையும் மாதக்கணக்கில் நிறுத்தி வைக்கிறது. வேலையைவிட்டு விலகிச்செல்லவும் விடுவதில்லை. பட்டச் சான்றிதழ்கள் இல்லாமல் அவர்கள் வேறெங்கும் வேலைக்குப் போகவும் முடியாது. இத்தகைய சூழ்நிலையில் ஆசிரியர்கள் தங்களின் மாணவர்களுக்கு எவ்வாறு பொறுப்பான, செம்மையான கல்வியைக் கற்பிக்க முடியும்?

சுயநிதிக் கல்லூரிகளில் மாணவர்கள் - ஆசிரியர்கள் விகிதாச்சாரம் விதிகளின்படி எவ்வளவு இருக்க வேண்டுமோ அவ்வளவு இருப்பதில்லை. அரசாங்கத்தினால் அல்லது அகில இந்திய தொழில் கல்வி கழகத்தினால் அக்கல்லூரிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்படும்போது போலியான ஆசிரியர்கள் முன் நிறுத்தப்பட்டு ஏமாற்றும் பழக்கம் நிலவுகிறது. ஒரு துறைக்கு நியமிக்கப்படும் ஆசிரியர் அவருக்குச் சிறிதும் தொடர்பில்லாத மற் றொரு துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பாடம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. இத்தகைய மோசடிகளின் மூலம் தொழிற் கல்வி என்பது எவ்வாறு சிறப்பாக அமைய முடியும்?'' என அவரது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இம்மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் கீழ்க்கண்ட ஆணையைப் பிறப்பித்தது: "அகில இந்திய தொழில்கல்விக்கான கழகம் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டுச் சட்டப்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக நிபுணர் குழு ஒன்றினை அமைக்க வேண்டும்.''
தமிழ்நாட்டில் தனியாருக்குச் சொந்தமான 495 பொறியியல் கல்லூரிகளில் பெரும்பாலும் மேற்கண்ட தவறுகள் நடைபெறுகின்றன. கல்வி வாணிபமாக்கப்பட்டுவிட்டது. அரசுக் கல்லூரிகளில் மாணவர்கள் செலுத்தும் கட்டணங்களைப் போல பல மடங்கு அதிகமான கட்டணங்களை தனியார் கல்லூரியில் சேரும் மாணவர்கள் செலுத்த வேண்டியுள்ளது. சேருவதற்கே நன்கொடை என்ற பெயரால் பெருந்தொகை கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால், அவர்களுக்குத் தரமான கல்வி கற்பிக்கப்படுவது இல்லை. அதற்கேற்ற தகுதிவாய்ந்த ஆசிரியர்களும் நியமிக்கப்படுவதில்லை. நியமிக்கப்படும் ஆசிரியர்களும் நிருவாகத்தின் கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். முழுமையான ஊதியம் அளிக்கப்படுவதில்லை. குறைந்த ஊதியம், மதிப்பற்ற நிலை, மிரட்டல் போன்றவற்றிற்கு இடையே வேலை பார்க்கும் ஆசிரியர்கள் எவ்வாறு மாணவர்களுக்கு நிறைவான கல்வியை அளிக்க முடியும்? ஒருபோதும் அவ்வாறு செய்ய முடியாது? இதன் விளைவாக மாணவர்களே பாதிப்புக்குள்ளாவார்கள். அரைகுறையாகக் கற்று பட்டம் பெறும் மாணவர்கள் சமுதாயத்திற்குப் பயன்படாமல் போவார்கள். இதன் விளைவாக நாடும் சமுதாயமும் நீண்ட காலத்திற்குப் பெரும் பாதிப்புக்குள்ளாகும்.

தனியார் கல்லூரிகளில் மாணவர்களுக்கான கட்டணம், ஆசிரியர்களுக்கான ஊதியம் மற்றும் சலுகைகள் ஆகியவற்றை ஒழுங்குப்படுத்துவதற்கான தமிழக அரசின் சார்பாக அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரைகள் இன்றளவும் நிறைவேற்றப்படவில்லை. அவற்றைக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை அரசும் மேற்கொள்ளவில்லை. இதன் விளைவாக தனியார் கல்லூரிகளில் சீர்கேடுகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இவற்றை அடியோடு களைந்து தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க வேண்டுமானால் அரசு அமைத்த குழுவின் பரிந்துரைகளை தனியார் கல்லூரி நிர்வாகங்கள் கண்டிப்பாக நிறைவேற்றவேண்டும். தவறிய கல்லூரிகளின் அங்கீகாரங்கள் இரத்து செய்யப்படுவதோடு நிர்வாகத்தின்மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். இல்லையேல் தமிழகம் நாளுக்கு நாள் தாழ்ந்து போவதை யாராலும் தடுக்க முடியாது.

தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல், கணிணியியல் போன்ற துறைகளில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் உலகமெங்கும் உள்ள நாடுகளில் நன்கு மதிக்கப்பட்டார்கள். வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. அவர்களும் திறமையாகப் பணியாற்றி அனைவரின் பாராட்டுதல்களுக்கும் உரியவர்களாகத் திகழ்ந்தார்கள். ஆனால் இவையெல்லாம் பழங்கதையாய், பகற்கனவாய் மாறிவிட்டன. இன்று தமிழ்நாட்டிலேயே பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலையில்லாத நிலைமை உருவாகிவிட்டது.

நமது நாட்டில் வேளாண்மைக்கு அடுத்ததாக பல இலட்சக்கணக்கானவர்கள் ஈடுபட்டிருக்கும் தொழில் கட்டடத் தொழிலாகும். தொழில் நுட்ப அறிவினை அடிப்படையாகக் கொண்டுள்ள இந்தக் கட்டுமானத் தொழிலில் பல இலட்சக்கணக்கானவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இத்தொழிலை முறைப்படுத்திக் கட்டுப்படுத்தும் அமைப்பு எதுவும் இல்லை.

மருத்துவப் பட்டதாரி ஒருவர் தொழில் செய்ய வேண்டுமானால் அகில இந்திய மருத்துக் கழகத்தில் தன்பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர் தொழில் செய்ய அனுமதிக்கப்படுவார். சட்டம் படித்த ஒருவர் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட வேண்டுமானால் அகில இந்திய சட்டக் கழகத்தில் தன் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆனால், கட்டுமானவியல் தொழிலில் ஈடுபடும் பொறியாளர் ஒருவர் எங்கேயும் பதிவு செய்யாமலும் எந்த அமைப்பில் சேராமலும் தனது தொழிலை நடத்த முடியும்.

கட்டுமானவியலில் பொறியியல் பட்டம் பெறாமல் மின்னியல், தொழில் நுட்பவியல், கணினி இயல் போன்ற துறைகளில் பட்டம் பெற்ற பொறியாளர்களும் மற்றும் பொறியியல் பட்டம் பெறாதவர்களும் தங்களுக்கு சிறிதளவிற்குக்கூட தொடர்பில்லாத கட்டடம் கட்டும் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இதன் விளைவாக தரமற்றக் கட்டடங்கள் கட்டப்படுவதும், கட்டும்போதே இடிந்து விழுவதும் அதனால் பல உயிர்கள் பலியாவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னையில் மவுலிவாக்கத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் கட்டடம் திடீரென இடிந்து தரைமட்டமானதும். நூற்றுக்கணக்கானவர்கள் இடிபாடுகளில் சிக்கி மாண்டதும் அண்மையில் நடைபெற்ற மறக்க முடியாத துயர நிகழ்ச்சியாகும்.

குசராத் மாநிலத்தில் கட்டடத் தொழில் புரிவோரை ஒழுங்குமுறைப்படுத்த 2006ஆம் ஆண்டில் குசராத் தொழில்துறை கட்டுமானவியல் பொறியாளர்கள் சட்டம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கிணங்க கட்டடப் பொறியாளர்களுக்கான தனியான ஒரு கழகம் சட்டப்படி அமைக்கப்பட்டுள்ளது. அதில் பதிவு செய்தவர்கள் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட முடியும்.

அதைப்போன்றதொரு சட்டம் தமிழ்நாட்டிலும் கொண்டுவரப்பட்டு, சுயதொழில் புரியும் கட்டுமானவியல் பொறியாளர்கள் அனைவரையும் பதிவு செய்து அதன் பின்னரே தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும்.

தனியார் பொறியியல் கல்லூரிகள் மட்டுமல்ல, தனியார் நடத்தும் அனைத்துவகைக் கல்லூரிகளிலும் ஏன் அரசு நடத்தும் கல்லூரிகளிலும் மேற்கண்ட ஒழுங்கீனங்களும், முறைகேடுகளும் பரவலாக நடைபெறுகின்றன. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்தத் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்ல தொடர்ந்து பல தலைமுறைகளைச் சேர்ந்த மாணவர்களும் தரமற்ற கல்வி கற்க நேரிடும். அதன் விளைவாக தமிழகம் எல்லா வகையிலும் தாழ்ந்து நமது முன்னேற்றம் தடைப்பட்டுப் போகும் என்பதில் ஐயமில்லை.

நன்றி : தினமணி 18-8-2017

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.