சரசுவதி மகால் நூலகம் முழுநேர நிர்வாக அதிகாரி நியமனம் நூலகப் பாதுகாப்பு இயக்கப் போராட்டம் வெற்றி PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 31 டிசம்பர் 2020 11:45

தஞ்சை சரசுவதி மகால் நூலகம், தமிழ்நாட்டில் உள்ள அரிய நூலகங்களில் ஒன்றாகும். இங்கு சோழ மன்னர்களாலும் பின்னர், நாயக்கர், மராட்டியர் ஆட்சிக் காலங்களிலும் சேகரிக்கப்பட்ட ஒரு இலக்கத்திற்கும் மேலான பன்மொழிச் சுவடிகளும், நூல்களும் உள்ளன.

அனைத்துத் துறைகளையும் சேர்ந்த மிக அரிய நூல்கள் இவையாகும். உலக அளவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பலரும் இந்நூலகத்திற்கு வந்து  தங்களின் ஆய்வுக்குப் பயன்படும் நூல்களின் மூலம் பெரும் பயன் அடைந்து வருகிறார்கள்.
இந்நூலகத்தை தமிழக  அரசின் பள்ளி கல்வித்துறை நிருவகிக்கிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் இந்நூலகக் குழுவுக்குத் தலைவராவார். ஆனால், கடந்த 25ஆண்டு காலமாக இந்நூலகத்திற்கு முழுநேர இயக்குநர், நிருவாக அலுவலர் நியமிக்கப்படவில்லை. அவ்வாறு உடனடியாக நியமிக்குமாறு மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தும்கூட அது நிறைவேற்றப்படவில்லை.
இந்நூலகத்தில் நடைபெறும் சீர்கேடுகள், அரிய சுவடிகள், நூல்கள் களவு ஆகியவை நடைபெறுவதைக் கண்டித்து சரசுவதி  மகால் நூலகப் பாதுகாப்பு இயக்கம் நடத்திய போராட்டத்தின் விளைவாக இந்நூலகத்திற்கு முழுநேர நிருவாக அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிய மகிழ்ச்சியடைகிறோம்.
இதற்காகப் போராடிய நூலகப் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மா. இராமதாசு,  குழுவின் தலைவர் பெ. கோபால் மற்றும் குழுவினர் அனைவருக்கும் நமது பாராட்டுதல் உரித்தாகுக.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.