மாவட்டச் சீரமைப்பில் ஆய்வு தேவை - பழ.நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 01 ஆகஸ்ட் 2019 10:51

"தென்காசி, செங்கல்பட்டு ஆகிய புதிய மாவட்டங்கள் தமிழ்நாட்டில் உருவாக்கப்படும்” என சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் அறிவித்து இருப்பது வரவேற்புக்குரியதாகும்.

ஏற்கனவே கடந்த சட்டமன்ற கூட்டத்தின் போது கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாகப் பிரிக்கவேண்டும் என்றும், தஞ்சை மாவட்டத்திலிருந்து கும்பகோணம் மாவட்டத்தைப் புதிதாக உருவாக்க வேண்டும் என்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பெரிய மாவட்டங்களைப் பிரிப்பது நிர்வாகத்தைச் சீராக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவ்வாறு புதிய மாவட்டங்களை உருவாக்கும் போது சீரான மற்றும் முறையான கொள்கைப் பின்பற்றப்பட வேண்டும். இதற்கு முன்பாக தமிழ்நாட்டின் வரலாற்றினை பின்னோக்கி பார்த்தால் நமக்கு தெளிவான புரிதல் கிடைக்கும்.
பாண்டிய, சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு நிர்வாக வசதிகளுக்காகப் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. நாடுகள், வளநாடுகள், கூற்றங்கள் என இவை அழைக்கப்பட்டன. பின்னர் நாயக்க மன்னர்கள் ஆண்ட காலத்தில் பாளையப்பட்டுகள் என்ற பெயரில் பல பகுதிகளைப் பிரித்து ஆண்டனர். ஆங்கிலேயர் இந்த நாட்டை கைப்பற்றிய பிறகு ஜமீன்தார்கள் ஆண்ட பகுதிகளைத் தவிர எஞ்சிய பகுதிகளைப் பல மாவட்டங்களாகப் பிரித்து ஆண்டனர்.
பழைய சென்னை மாகாணம் என்பது ஐதராபாத், மைசூர், திருவாங்கூர், கொச்சி, புதுக்கோட்டை ஆகிய சமஸ்தானப் பகுதிகள் நீங்கலாக எஞ்சியிருந்த தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் பேசும் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு பெரிய மாகாணமாக விளங்கிற்று.
நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில், பெரிய மாவட்டமாக இருக்கிறது என்ற காரணத்தினால் வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து திருத்தணி, புத்தூர், சித்தூர், திருப்பதி, திருக்காளத்தி, பல்லவனேரி ஆகிய தமிழ்த்தாலுகாக்கள் பிரித்தெடுக்கப்பட்டு தெலுங்கு மாவட்டமான கடப்பையிலிருந்து மதனப்பள்ளி, வாயல்வாடி ஆகிய இரு தாலுகாக்களுடன் இணைத்து சித்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக பிற்காலத்தில் மொழிவழி மாநிலப் பிரிவினையின்போது திருப்பதியை நாம் இழக்கவேண்டி நேர்ந்தது. அந்த நாளில் சித்தூர் மாவட்டம் உருவான போதே தமிழர்கள் எச்சரிக்கையாக இருந்திருப்பார்களானால் திருப்பதியை நாம் இழந்திருக்க மாட்டோம். எனவே, மாவட்டங்களை நிர்வாக வசதிக்காகப் பிரிக்கும்போது முன்னெச்சரிக்கையுடனும், தொலைநோக்குப் பார்வையுடனும் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. இல்லையேல் பின்விளைவுகள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.
மொழிவழி மாநிலம் உருவாவதற்கு முன் ஒன்றுபட்டிருந்த சென்னை மாகாணத்தில் தமிழ் மாவட்டங்களாக சென்னை, செங்கற்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, தஞ்சை, திருச்சி, சேலம், கோவை, நீலகிரி, மதுரை, இராமநாதபுரம் மற்றும் நெல்லை ஆகிய 12 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. மொழிவழி மாநிலப் பிரிவினைக்குப்பிறகு திருவாங்கூர் சமஸ்தானத்தோடு இருந்த கன்னியாகுமரி மாவட்டம் பிரிக்கப்பட்டு தமிழ்நாட்டோடு இணைக்கப்பட்டது.
இந்தியா விடுதலை பெற்றபோது இந்தியாவோடு இணைந்த புதுக்கோட்டை சமஸ்தானப்பகுதி திருச்சி மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சிக் காலத்தில் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை தனியாகப் பிரிக்கப்பட்டுத் தனி மாவட்டமாக்கப்பட்டது. சேலத்திலிருந்து தர்மபுரி பிரிக்கப்பட்டுத் தனி மாவட்டமாக்கப்பட்டது. இதைத் தவிர பெரிய மாவட்டங்கள் எதையும் அவர்கள் பிரிக்கவில்லை. பிற்காலத்தில், தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சியின்போது பல மாவட்டங்கள் இரண்டாக அல்லது மூன்றாகப் பிரிக்கப்பட்டன. அவை பிரிக்கப்படும்போது எத்தகைய முறையை பின்பற்றியோ அல்லது நன்கு ஆய்ந்து சீராகவோ செய்யப்படவில்லை. அரசியல் காரணத்திற்காகவோ, வேறு காரணங்களுக்காகவோ மாவட்டப் பிரிவினை நடைபெற்றது. எனவே, இவை முழுமையாக ஆராயப்பட்டு மறு சீரமைப்பு செய்யப்படவேண்டும்.  
1971ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை பல கட்டங்களில் மாவட்டங்கள்  இரண்டாக அல்லது மூன்றாகப் பிரிக்கப்பட்டன. 1979ஆம் ஆண்டில் கோவை மாவட்டத்தைப் பிரித்து ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது. 1985ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து சிவகங்கை, விருதுநகர் ஆகிய இரண்டு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுப் புதிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன. 1985ஆம் ஆண்டில் மதுரை மாவட்டத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. 1986ஆம் ஆண்டில் நெல்லை மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்பட்டது. 1989ஆம் ஆண்டு வடஆற்காடு மாவட்டத்திலிருந்து வேலூர் மாவட்டமும், திருவண்ணாமலை மாவட்டமும் உருவாக்கப்பட்டன. 1991ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்திலிருந்து நாகை மாவட்டம் உருவாக்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு தென்ஆற்காடு மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. 1995ஆம் ஆண்டில் திருச்சி மாவட்டத்திலிருந்து கரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. 1997ஆம் ஆண்டில் மதுரை மாவட்டத்திலிருந்து தேனி மாவட்டம் பிரிக்கப்பட்டது. அதே ஆண்டு நாகை மாவட்டத்திலிருந்து திருவாரூர் மாவட்டமும், சேலம் மாவட்டத்திலிருந்து நாமக்கல் மாவட்டமும், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து திருவள்ளூர் மாவட்டமும் உருவாக்கப்பட்டது. 1997இல் செங்கல்பட்டு மாவட்டம் மீண்டும் பிரிக்கப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டமும், 2007இல் பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து அரியலூர் மாவட்டமும், 2008ஆம் ஆண்டில் கோவை மாவட்டத்திலிருந்து திருப்பூர் மாவட்டமும் உருவாக்கப்பட்டது.
அரசியல் தலைவர்களின் பெயர்கள், சாதித் தலைவர்கள் பெயர்கள் இந்த மாவட்டங்களுக்குச் சூட்டப்பட்டன. இந்தப் பெயர்களை சூட்டுவதற்காகவே இந்த மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன என்று கூடச் சொல்லலாம். இதன் விளைவாக ஆட்சி மாறிய போதெல்லாம் மாவட்டப் பெயர்களும் மாற்றப்பட்டன. சாதிச்சங்கங்கள் மற்றும் அமைப்புகளும் தங்கள் சாதித் தலைவர்கள் பெயரால் புதிய மாவட்டங்கள் அமைக்கப்பட வேண்டுமென்றும், சில சாதித் தலைவர்கள் பெயரைச் சூட்டியதை எதிர்த்தும் போராட்டங்கள் நடத்தின. இதன் விளைவாக தமிழக அரசுப் புதிதாக சூட்டப்பட்ட பெயர்களையெல்லாம் நீக்கி விட்டு பழைய பெயர்களிலேயே மாவட்டங்கள் அழைக்கப்படும் என அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நாடு சுதந்திரம் பெற்றபிறகு மக்கள் தொகை கூடியிருக்கிறது. மாவட்ட ஆட்சியாளர்களின் பணிகளும் விரிவடைந்திருக்கின்றன. நில வருவாய்ப் பணியோடு திட்ட நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் போன்ற பல புதிய பொறுப்புகளை அவர்கள் ஏற்றிருக்கிறார்கள். வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் நீதி நிர்வாகமும் அவர்கள் கையில் இருந்தது. அது மட்டுமே காங்கிரசு ஆட்சிக் காலத்தில் பிரிக்கப்பட்டது. இதன் காரணமாக மாவட்ட ஆட்சி அலுவலகங்களில், மாவட்ட வருவாய் அலுவலர் பதவி, மாவட்ட ஆட்சிக் தலைவர்களுக்குப் பல உதவியாளர்கள் போன்ற ஏராளமான புதிய பதவிகள் ஏற்படுத்தப்பட்டன. எனவே, மாவட்ட நிர்வாகங்களை முற்றிலுமாக சீரமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. வெள்ளையர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட மாவட்ட எல்லைகள் முற்றிலுமாகத் திருத்தி அமைக்கப்பட வேண்டியது இன்றியமையாதது ஆகும். மாவட்டங்களைச் சிறிதாக்கினால் நிர்வாகத் திறம் மேம்படும் என்பதில் சந்தேகமில்லை. மாவட்டங்களைப் பிரிப்பதால் நிர்வாகச் செலவு கூடும் என்பது சரியல்ல. சிறிய மாவட்டங்கள் ஆகும் போது பல பதவிகள் தேவையில்லாமல் போய்விடும். அவ்வாறு செய்வதின் மூலம் நிர்வாக செலவைக் குறைக்கமுடியும்.
மாவட்டங்களை இவ்வாறு பிரிக்கும்போது ஒரே சீரான கொள்கை பின்பற்றப்படவேண்டியது அவசியமாகிறது.
1. மக்கள் நலன், நிர்வாக வசதி, இயற்கையாக ஒருங்கிணைந்த பகுதிகள்  போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மாவட்ட புனரமைப்பு அமையவேண்டும்.  
2. ஒரு மாவட்டத்தில் சராசரி 20 இலட்சம் மக்கள் தொகைக்கு மேல் இருக்கக்கூடாது.
3. ஒருமாவட்டத்தில் 10 அல்லது 12 ஊராட்சி ஒன்றியங்களுக்குமேல் இருக்கக்கூடாது (சில நகராட்சிகள் உள்பட)
4. ஒரு நாடாளுமன்றத் தொகுதி ஒரு மாவட்டமாக இருக்கும்வகையில் மாவட்டங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும். மாவட்ட எல்லைகளே நாடாளுமன்றத் தொகுதி எல்லையாகும் வகையிலும், இரண்டின் எல்லைகளும் ஒருங்கிணையுமாறும் இயற்கையான நிலவியல், மக்கள்தொகை, நிர்வாக வசதி, பாசன ஏற்பாடுகள் போன்ற அம்சங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பிரிக்கவேண்டும்.
இவ்வாறு செய்தால், புதுச்சேரி நீங்கலாக தமிழகத்தில் 39 மாவட்டங்கள் அமைக்கவேண்டியிருக்கும். தற்போது தமிழ்நாட்டில் 35 மாவட்டங்கள் உள்ளன. மேலும் சில மாவட்டங்கள் பிரிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளன என்பதை நினைவுப்படுத்திக் கொண்டால் இந்த எண்ணிக்கை அதிகமானதல்ல என்பது தெளிவாகும்.
இதன் மூலம், பலவகையிலும் நிர்வாகத்திறனை மேம்படுத்த முடியும். நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்ட ஆட்சியாளரோடு இணைந்து தங்கள் மாவட்டத்தின் வளர்ச்சிக்குரியவற்றைச் செய்யமுடியும்.
தற்போது மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் இயங்கும் மாவட்ட வளர்ச்சிக்குழுவில் அம்மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நகராட்சி, ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்பட குறைந்தஅளவு நூறு பேருக்குக் குறையாமல் அங்கம் வகிக்கிறார்கள். சிறிய மாவட்டங்களாகும்போது இந்த எண்ணிக்கை மிகவும் குறையும். நிர்வாகத் திறன் மேம்படும். மாவட்ட வளர்ச்சிக்குழுவுக்கு அம்மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரே தலைமை தாங்க வேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் அக்குழுவின் செயலாளராக இருக்க வேண்டும். இதன் மூலம் இக்குழு சனநாயக வடிவம் பெறும்.
ஒவ்வொரு மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக நடுவண் அரசும், மாநில அரசும் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. இதைத்தவிர, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தொகுதி வளர்ச்சி நிதியாக ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் வீதம் 5ஆண்டுகளுக்கு 25கோடி ரூபாய்நடுவண் அரசு ஒதுக்குகிறது. தமிழக சட்டமன்ற உறுப்பினருக்கு தொகுதி வளர்ச்சி நிதியாக ஆண்டுக்கு 3 கோடி ரூபாய்களை தமிழக அரசு ஒதுக்குகிறது. ஆக ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு 5 ஆண்டுகளுக்கு ரூபாய் 15கோடி ஒதுக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சேர்த்து மொத்தமாக ரூபாய் 90கோடி ஒதுக்கப்படுகிறது. ஆக மத்திய-&மாநில அரசுகளால் மொத்தம் 115 கோடி ரூபாய் 5 ஆண்டுகளுக்கு அம்மாவட்டத்தின் வளர்ச்சித்  திட்டங்களுக்காகத் தனியாக அளிக்கப்படுகிறது. அது முழுமையாக அந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்குப் பயன்படும்.
இவ்வாறு மாவட்டங்களைப் பிரிப்பதற்காகத் தனியாக ஒரு குழு அமைக்கப்படவேண்டும். இக்குழுவிற்கு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் முன்னாள் தலைமைச் செயலாளர், முன்னாள் காவல்துறைத் தலைவர், முன்னாள் பாசனத்துறைத் தலைமைப்பொறியாளர் சுற்றுச்சூழலியல் அறிஞர், நீரியல் அறிஞர், நிலவியல் அறிஞர் ஆகியோர் அடங்கிய மாவட்டச் சீரமைப்புக் குழு ஒன்றினை நியமித்து அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோரின் கருத்துக்களை அறிந்து மாவட்டங்களைத் திருத்தி அமைப்பது எல்லாவகையிலும்  சிறப்பாக இருக்கும். நிர்வாகமும் புதிய பொலிவைப் பெறும். மக்களுக்கும் நிர்வாகத்திற்குமிடையே உள்ள இடைவெளி குறையும். மக்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்க்க வழி ஏற்படும்.
ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள 32 மாவட்டங்கள் உள்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த மாவட்டச்  சீரமைப்புக்குழு சென்று அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும்  அறியவேண்டும். ஏற்கெனவே உள்ள மாவட்டங்களின் எல்லைகளில் மாற்றம், சில பகுதிகளைப் பிரித்து அண்டை மாவட்டத்தில் சேர்த்தல்  போன்ற கோரிக்கைகளையும் ஆராய்ந்து ஒட்டுமொத்தத்  தமிழகத்தையும் 39 மாவட்டங்களாக மறு புனரமைப்பு செய்யவேண்டும்.
                   -  நன்றி - தினமணி - 24-07-2019

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.