முற்றத்தைச் சிதைத்த முகமூடி மனிதர்கள் - தமிழ்த் தேசியப் பாவலர் பழனி-மகிழ்நன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 16 ஜனவரி 2014 15:09

முள்ளிவாய்க்கால் முற்றத்துப் பெருஞ்சுவரைச் சிதைத்திட்ட
முகமூடி மனிதர்களின் முகத்திரையைக் கிழித்திட்டால்
அகம்வாடும் தமிழர்கள் அடையாளம் கண்டிடலாம்
தொகையாக அவர்கள்செயும் துரோகத்தை, தமிழ்ப்பகையை!


வாய்மணக்கத் தமிழரென்பார்; வஞ்சகமே கொண்டிடுவார்;
வாய்ப்பேதும் கிடைத்திட்டால் தாயென்றும் பாராமலே
பேய்க்குணத்தைக் காட்டிடுவார், பொல்லாத பகல்வேடப்
பொய்யர்களை இனம்கண்டு புறந்தள்ளல் கடனாமே!


சூழ்ச்சியினை, துரோகத்தைச் சொந்தமாகக் கொண்டவர்களை
தன்னலத்தால் அரசியலைச் சந்தர்ப்ப வாதமாக்கியே
சண்டாளம் புரிபவர்களைத் தீண்டத்தகாத் தீயவர்களைத்
தீமையறிந்தே ஒதுக்க வேண்டும்; செம்மைநலம் காக்கவேண்டுமே!


இனப்பற்றுத் தமிழர்களின் குணக்கொடையால், உலகத்தமிழ்
இனமக்கள் ஒன்றுகூட உருவான முள்ளிவாய்க்கால்
நினைவகத்தைக் காப்பதற்கே உறுதிகொள்வோம்; தமிழரெல்லாம்
துணைநின்றே தோள்கொடுப்போம் தூயதமிழ் (தலைவர்க்கே)


தமிழரெல்லாம் ஓரணியாய்த் தரணியிலே திரண்டெழுந்து
தமிழ்ஈழத் தமிழர்களின் தன்னுரிமையைக் காப்பதற்கும்
தமிழ்ஈழம் மீட்பதற்கும், தக்ககொள்கை நாடுகளுடன்
தாம் ஒன்றாய் நாம் இணைந்தே உலகளவில் முயல்வோமே!

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.