இராசபக்சே தோல்வி வரவேற்கத்தக்கது ஆனால் முழுமையான மகிழ்ச்சி அளிக்கவில்லை.பழ.நெடுமாறன் அறிக்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 13 ஜனவரி 2015 14:01

இலங்கைத் தேர்தலில் இராசபக்சே அடைந்துள்ள படுதோல்வி வரவேற்கத்தக்கது. ஆனாலும், தமிழர்களுக்கு முழுமையான மகிழ்ச்சியளிப்பது ஆகாது. கடந்த காலத்தில் பதவியிலிருந்த சிங்களத் தலைவர்கள் யாராக இருந்தாலும், சிங்கள இனவெறியின் அடிப்படையிலேயே ஆட்சி நடத்தினார்கள். தமிழர்கள் மீது ஒடுக்குமுறைகளை ஏவுவதில் தங்களுக்குள் போட்டிப்போட்டார்கள்.

இப்போது வெற்றிபெற்று இருக்கிற cசேனா இதற்கு விதிவிலக்காக இருப்பாரா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் அவரது தேர்தல் காலப் பேச்சுக்கள் அத்தகையை நம்பிக்கையை நமக்கு அளிக்கவில்லை. ஆனாலும், பதவியேற்ற பிறகாவது அவர் கீழ்க்கண்ட 3 செயற்பாடுகளை மேற்கொள்ள முன்வரவேண்டும்.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை, மனித உரிமை மீறல், போர்க்குற்றம் ஆகியவற்றை விசாரிப்பதற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையம் அமைத்த விசாரணைக் குழுவைத் தனது நாட்டிற்குள் அனுமதித்து சுதந்திரமாக விசாரணை நடத்தத் துணை நிற்க வேண்டும்.

தமிழர் பகுதியிலிருந்து சிங்கள இராணுவத்தை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும். தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படை நடத்தி வருகிற தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.

குறைந்தபட்சமாக இவற்றைச் செய்தால் மட்டுமே அவர்மீது தமிழர்களுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் நம்பிக்கை பிறக்கும். இவற்றை மேற்கொள்ள வேண்டும் என உலக நாடுகளின் அழுத்தம் அவர்மீது தொடரவேண்டும்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.