தமிழர் தேசிய முன்னணியின் - செய்திகள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 09 செப்டம்பர் 2014 11:43

விழுப்புரம் மாவட்டம்
தமிழர் தேசிய முன்னணியின் விழுப்புரம் மாவட்டக் கூட்டம் 17-08-14 பிற்பகல் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எழில் இளங்கோ தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர்கள் கோ.பாபு, கோ. கணேசன், மாவட்டச் செயலாளர்கள் பா. சோதிநரசிம்மன், க. லலித்குமார், வழக்குரைஞர் வி. பிரபு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அ. அகிலன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அ. தினகர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் இரா. கருணாநிதி, பதி. கார்த்தி, த. அருண்குமார், நா. வரதன், அ.குணாநிதி, சு. பத்ரி, வி. தீனதயாளன், கி. பாலாஜி, வே. காமராஜ் உள்பட பலரும் கலந்துகொண்டு கருத்துரையாற்றினர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:

விழுப்புரம் தென்பென்னையாற்றில் தொடரும் மணல் கொள்ளையைத் தடுத்திடப் போராட்டம் :
விழுப்புரம் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது தென்பெண்ணையாறே ஆகும். விழுப்புரம் நகரத்திற்கு மட்டுமல்லாது கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலூர், செஞ்சி, திருவெண்ணைநல்லூர் என மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்கிவருகிறது. ஆனால், தென்பெண்ணையாற்றின் கரையோர சிற்றூர் பகுதிகளிலிருந்து கட்டுப்பாடற்ற மணல்கொள்ளை காலநேரமில்லாமல் நடந்து வருவது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கும் செய்தியாகும். தொடரும் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வேளாண்மை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது வேதனை தரும் நிகழ்வாகியுள்ளது. மேலும் குடிநீரின் சுவையும் மாறியுள்ளது. இந்நிலையில் வரும் காலங்களில் கடும் குடிநீர் பஞ்சத்தை விழுப்புரம் மாவட்ட மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

தமிழின உணர்வுகொண்ட மாணவர்களைத் தாக்கிய திரைப்படக் குழுவினருக்குக் கண்டனம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை;ச் கொச்சைப்படுத்தும் வகையிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் அவர்களின் போராட்டத்தையும் சிறுமைப்படுத்தும் வகையிலும் பொய்யான செய்திகளைக் கொண்ட சிங்கள அரசுக்கு வலுசேர்க்கும் நோக்கில் "புலிப் பார்வை' என்னும் பெயரில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் மீது குண்டர்களை ஏவி கொடுந்தாக்குதல் நடத்திய படக்குழுவினரை வன்மையாகக் கண்டிப்பதோடு, இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் தொடர அனுமதிக்க முடியாது என்று எச்சரித்தும் தீர்மானம் இயற்றப்பட்டது. நிறைவாக மாவட்டப் பொருளாளர் கொ. ப. சிவராமன் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுபெற்றது.

மதுரை மாநகர் - மாவட்டம்

மதுரை மாவட்ட நிர்வாகக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

மதுரை மாநகர் தமிழர் தேசிய முன்னணியின் நிர்வாகக் குழுக் கூட்டம் நகர் தலைவர் வெ.ந. கணேசன் தலைமையில் 17-08-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது கூட்டத்தில் தமிழர் தேசிய முன்னணியின் மாநில துணைத் தலைவர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் எம்.ஆர். மாணிக்கம், மாநில பொதுச் செயலாளர் க. பரந்தாமன், முனைவர் கு. வேலன், முன்னாள் நகர் தலைவர் ச. பிச்சைகணபதி மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்கள். நகர் செயலாளர் புதூர் முருகன் நன்றி கூறினார்.

1. தமிழ்நாடு மின்சார வாரியம் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கட்டணம் வசூலிப்பதால் ஏழை மக்களை வாட்டி வதைக்கின்றது. மின்சாரம் இரண்டு மாதத்திற்குப் பயன்படுத்தும்பொழுது யூனிட் அட்டவணைப்படி மின்சாரக் கட்டணம் பல மடங்கு உயர்ந்து எளிய மக்களை பாதிக்கின்றது. எனவே மாதந்தோறும் கட்டணத்தைப் பெறவில்லை. பொது மக்கள் பாதிக்காத வகையில் மாதந்தோறும் மின் கட்டணம் பெறும்படி தமிழக அரசு உத்தரவிட தமிழக முதல்வரை இச்செயற்குழு கூட்டம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

2. குடிநீரில் சாக்கடை கலப்பதை கண்டும் காணாமல் இருக்கின்ற மதுரை மாநகராட்சியை தமிழர் தேசிய முன்னணி வன்மையாகக் கண்டிப்பதோடு, குடிநீரில் சாக்கடை கலப்பதை சரி செய்து சுகாதாரமான குடிநீரை பொது மக்களுக்கு வழங்கும்படி இச்செயற்குழு கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

3. மதுரை மாநகரில் உள்ள அனைத்து வட்டங்களிலும் தமிழர் தேசிய முன்னணியின் அமைப்பினை ஏற்படுத்துதல், புதிய உறுப்பினர்களை சேர்த்தல், நமது தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்களை அழைத்து கொடியினை ஏற்றுதல், உலகத் தமிழ் மக்களுக்காக ஒன்றுபட்டு பாடுபட தமிழின ஆதரவாளர்கள் தமிழர் தேசிய முன்னணியில் இணைய அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

4. மாநகராட்சியில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள வட்டங்களில் நிலவிவரும் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க உடனடியாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும், மழைக்காலம் முடிந்தவுடன் சாலைகளைச் சீராக்கி போக்குவரத்திற்கு ஏற்றவாறு செய்ய வேண்டும், குண்டும், குழியாகவுள்ள பகுதிகளைச் செப்பனிட வேண்டும்.

5. தமிழக மீனவர்கள் பிரச்சினை தீர கச்சத்தீவினை உடனடியாக திரும்ப பெற வேண்டும். உச்ச நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை இரத்து செய்யப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் மற்ற நால்வரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

6. காங்கிரஸ் அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் துரோகம் செய்ததை போல பா.ஜ.க. அரசும் செய்யக்கூடாது.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.